கிளாம்பாக்கம் .. மேம்பாலமும், ரயில் நிலையமும் அமைக்காமல் திறக்க முடிவு ஏன்? மக்கள் கேள்வி
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொங்கலுக்கு திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டாமல், புதிதாக புறநகர் ரயில் நிலையம் அமைக்காமல் திறப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று சென்னைவாசிகள் கவலை அடைந்துள்ளனர்.
சென்னையின் புறநகர் பகுதியான வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சம் செலவில் சென்னைக்கான புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் தென் மாவட்டங்களில் செல்லும் பொதுமக்களுக்காக இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பொங்கலுக்கு திறக்கப்படும் என்று சிஎம்டிஏ துறையின் அமைச்சரும், இந்து அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டால், இனி சென்னையில் வாழும் தென்மாவட்ட மக்கள் கோயம்பேட்டிலோ அல்லது வடபழனி, அசோக் நகர், கிண்டி, பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர் போன்ற பகுதியில் பேருந்துகளில் ஏறி நேரடியாக ஊருக்கு போக முடியாது.
சென்னையில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிளாம்பாக்கம் தான் ஒன்றரை கோடி மக்கள் வாழும் சென்னை மக்களுக்கான புறநகர் பேருந்து நிலையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி மிகவும் சிக்கலான பகுதியாகும். ஏனெனில் கிளாம்பாக்கம் என்பது சென்னையின் மிக முக்கியமான நுழைவு வாயிலாக உள்ளது. துறைமுகம் செல்லும் லாரிகள், மீஞ்சூர் வெளிவட்ட சாலை, தாம்பரம் பெருங்களத்தூர் சாலை, காஞ்சிபுரம் வண்டலூர் சாலை, கேளம்பாக்கம் சாலை, வண்டலூர் பூங்கா, செங்கல்பட்டு திருச்சி சாலை ஆகியவை இணையும் இடத்தில் இருக்கிறது. எனவே இங்கு போக்குவரத்து நெரிசல் அல்லது ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் சென்னைக்கு நுழையவே முடியாத கடினமான நிலை ஏற்படும்
அப்படியான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்தவர்கள், கையோடு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்காமல் ஏன் இவ்வளவு தாமதம் செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. சரியாக சொல்வது என்றால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் , வண்டலூர் மேம்பாலம் தொடங்கும் இடத்தில் இருக்கிறது. இந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்த போதே, வாகனங்கள் எளிதாக உள்ளே நுழைய தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலமும் அமைத்திருக்க வேண்டும். அதை இன்று வரை செய்யவே இல்லை.
அதேபோல் இன்னொரு முக்கிய பிரச்சனையும் உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்த போது, தெற்கு ரயில்வேக்கு அழுத்தம் கொடுத்து பேருந்து நிலையம் எதிரே ரயில் நிலையத்தை அமைத்திருக்க வேண்டும். ஏனெனில் சென்னையின் பல்வேறு பகுதி மக்கள் கிளாம்பாக்கம் வர பேருந்துகளை மட்டுமே நாட வேண்டியதிருக்கும். ஒன்றரை கோடி மக்கள் வாழும் சென்னையில் அது எளிதானது அல்ல.. கோயம்பேடு பேருந்து நிலையமாவது சென்னையின் மையப்பகுதியில் இருந்தது. வரும் வழியில் அனைவரும் ஏறிக்கொள்ள முடியும். அண்ணாநகர், வடபழனி, கிண்டி, பல்லாவரம், தாம்பரம் வரை மக்கள் எளிதாக ஏற முடிந்தது. அதனால் கோயம்பேட்டில் முதலில் ரயில் நிலையம் இல்லை என்றாலும் சிக்கல் ஏற்படவில்லை
ஆனால் மொத்த சென்னையும் கிளாம்பாக்கம் தான் வர வேண்டும் என்பதால், கண்டிப்பாக புறநகர் ரயில் நிலையம் அமைக்க வேண்டியது அவசியமாகும். அப்படி அமைக்காமல் திறப்பது, சென்னை மக்களுக்கு சிக்கலைத்தான் ஏற்படுத்தும். ஏனெனில் வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் வந்து இறங்கி அங்கிருந்து கிளாம்பாக்கம் வருவது தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும்.
புறநகர் ரயில் நிலையமும், மேம்பாலமும் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. பணிகள் துவங்கபோவதாக அறிவித்துள்ளது. ஆனால் பேருந்து நிலையம் அமைக்கும் போதே இதை செய்யாமல் விட்டது என்பது எந்த மாதிரியான நகரகட்டமைப்பு திட்டமிடல் என்ற கேள்விகளை பொதுமக்கள் எழுப்புகிறார்கள். ஏனெனில் புதிததாகஒருமால் திறந்தாலே அந்த பகுதி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்படியான சூழலில் மொத்த சென்னைக்குமான புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் போது, ஏன் இதை கவனிக்க மறுக்கிறார்கள் என்ற கேள்வியையும் பொதுமக்கள் எழுப்புகிறார்கள்.
சென்னையின் திருவெற்றியூர், கொளத்தூர், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, அண்ணா நகர், பாடி, ஆவடி பகுதி மக்கள் கிளாம்பாக்கம் வந்து தான் பேருந்தில் ஏற முடியும் என்கிற நிலை உருவாகும் போது, அரசு கண்டிப்பாக மேம்பாலம் மற்றும் புறநகர் ரயில் நிலையத்தை அமைத்த பின்னர் கிளாம்பாக்கத்தை திறப்பது நல்லது என்கிறார்கள் சென்னை மக்கள்.












Click it and Unblock the Notifications