ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. தமிழகத்தில் தேசிய கொடியுடன் பேரணி நடத்த போறோம்.. பாஜக நயினார் நாகேந்திரன்
சென்னை: பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் நம் வெற்றியை கொண்டாடும் வகையிலும், நம் வீரர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும், பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும், தமிழகத்தில் 4 கட்டங்களாக தேசியக் கொடிகளுடன் சிந்தூர் யாத்திரை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தில் 4 கட்டங்களாக இந்த யாத்திரை நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள 10 பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது. தொடர்ந்து பாகிஸ்தான் நடத்திய எதிர் தாக்குதல்களை இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர். தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு அழைத்து தாக்குதல் நிறுத்தம் செய்யப்பட்டது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் நம் வெற்றியைக் கொண்டாட, தமிழகத்தில் 4 கட்டங்களாக தேசியக் கொடிகளுடன் சிந்தூர் யாத்திரை நடத்தப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது:- "உலக அமைதிக்கு எதிராகச் செயல்பட்டும், பயங்கரவாதிகளின் பயிற்சிக்கூடாரமாகவும், அடைக்கல பூமியாகவும், தொடர்ந்து ஊக்கமளித்த பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு இறுதி முடிவுகட்டும் வகையில், நம் இந்தியா தேசம் தீவிரத்தாக்குதல் நடத்தியுள்ளது.
கோழைகளைப் போல ராணுவ உடையில் வந்து, அப்பாவிப் பொதுமக்களை பஹல்காமில் கொன்ற கொலைகார்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாக்கிஸ்தானின் பயங்கரவாதத பயிற்சிக்கூடங்களுக்கும், பாதுகாப்பு மையங்களுக்கும், நமது ஆயுதப்படைகளால், முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக பலத்த சேதங்கள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வீரத்துடனும் விவேகத்துடனும், வித்தகத்துடனும், வேகத்துடனும், துல்லியமாகத் தாக்குதல் நடத்தி, மாபெரும் வெற்றிக்கு அடிகோலிய, நமது ஆயுதப்படைகளையும், மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் உறுதியான தலைமையையும் சிறப்பிக்கும் வகையில், அடுத்த சில நாட்களுக்கு மிகப்பெரிய அளவில் மூவர்ணக் கொடி ஏந்திய யாத்திரைகள் நடத்திட செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த யாத்திரைகள் நாட்டிற்காக நாட்டு மக்களால் நான்கு கட்டங்களாக நடைபெறும்.
1. மாநிலத் தலைநகரம் சென்னையில் மே 14-ஆம் தேதி.
2. இதர முக்கிய நகரங்களில் மே 15-ஆம் தேதி.
3. மற்ற மாவட்ட பேரூர்களில் மே 16 மற்றும் 17-ஆம் தேதி.
4. சட்டசபைத் தொகுதிகள், தாலுகாவின் ஊர்கள், பெரிய கிராமங்கள் ஆகிய இடங்களில் மே 18 முதல் 23-ஆம் தேதி வரையும் நம் தேசியக் கொடியான "மூவர்ணக் கொடி ஏந்திய யாத்திரைகள்" நடத்த ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான வழிகாட்டுதல்கள் தலைமையிலிருந்து தொடர்ந்து வழங்கப்படும். நம் வீரர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும், பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும், நம் நாட்டின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், தயவுசெய்து பெருந்திரளாக பொதுமக்கள் கூடி நம் நாட்டு மக்களின் நல்லெண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் பெரிய அளவில் யாத்திரைகளை ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications