இப்படியே போனா "அவங்க" உள்ள வந்துடுவாங்க.. நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசி கேம்ப்.. வசமான செக்?!
சென்னை: அவங்க வந்தா மட்டும்தான் நிலைமை சரியாகும்.. இப்ப ஒவ்வொருத்தரும் தனித்தனியா இருக்காங்க.. இது கட்சிக்கு நல்லது இல்லை என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் புலம்ப தொடங்கி உள்ளனர். அதிமுகவிற்குள் கடந்த சில நாட்களாக நடக்கும் சில விஷயங்கள் கட்சியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
அதிமுகவில் தற்போது நிலைமை "All is not well" என்று கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் அதிமுக கட்சிக்குள் மூத்த தலைவர்களுக்கு இடையில் கடும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
அதிலும் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி - ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பெரிய விரிசல் ஏற்பட்டது. அந்த விரிசல் இன்னும் வளர்ந்து கொண்டேதான் செல்கிறது.

அறிக்கை
ஒரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் இடையே கடுமையான அறிக்கை மோதல் நடந்து வருகிறது. இரண்டு தரப்பும் மாறி மாறி அதிமுக லெட்டர் பேடில் தங்கள் பெயரை மட்டும் போட்டு, முன்னாள் முதல்வர் என்ற பெயரோடு அறிக்கை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். வெளிப்படையாக இவர்களுக்கு இடையில் பெரிய மோதல் இருப்பது பட்டவர்த்தனமாக தெரிய தொடங்கி உள்ளது.

மோதல்
இரண்டு முக்கிய தலைவர்களும் கட்சிக்குள் மோதிக்கொண்டு இருக்கும் போது, இன்னொரு பக்கம் வேறு சில தலைவர்களும் கட்சிக்குள் மோதலில்தான் இருக்கிறார்கள். கோவையில் இருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் தவிர வேறு யாரும் பெரிய ஒற்றுமையாக இல்லை என்று கூறப்படுகிறது. தேர்தலில் தோல்வி அடைந்த ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி போன்ற முன்னாள் அமைச்சர்களுக்கு கட்சிக்குள் பெரிய மதிப்பு இல்லாததால் அவர்களும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

ஜாதி
ஜாதி ரீதியாகவும், ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவு ரீதியாகவும் எம்எல்ஏக்கள் பலர் அதிமுகவில் பிரிந்து கிடக்கிறார்கள். அதோடு இன்னொரு பக்கம் நிலோபர் கபிலை கட்சியில் இருந்து நீக்கியதாலும் சில எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். நிலோபர் கபிலை நீக்க கே. சி வீரமணி ஒரு பக்கம் அழுத்தம் கொடுத்தார் என்று பேச்சுக்கள் அடிபட்டாலும், நிலோபர் கபில் மீது இருக்கும் பணமோசடி புகார்கள்தான் இதற்கு காரணம் என்றும் கூறுகிறார்கள்.

நிலோபர் கபில்
பணமோசடி வழக்கில் நிலோபர் கபில் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதால் அவர் கழட்டி விடப்பட்டார் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதுதான் பல எம்எல்ஏக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை நமக்கு எதிராகவும் இப்படி புதிய அரசு நடவடிக்கை எடுத்தால், அதிமுக கட்சி நம் பக்கம் நிற்காமல், நம்மை நீக்கிவிடுமோ என்று சில மூத்த தலைவர்கள் அச்சத்தில் உள்ளனராம்.

ஏன்
சரியான வலுவான தலைமை இல்லை, எம்எல்ஏக்களை ஒன்றாக இணைக்கும் ஒருவர் கட்சியில் இல்லை, பிரச்சனை என்றால் கழட்டிவிடுகிறார்கள் என்று இப்போதே ஆங்காங்கே சில பேச்சுக்கள் அதிமுகவில் கேட்கின்றன. இப்படி எம்எல்ஏக்கள் சிதறி தனி தனியாக வேலைகளை பார்த்தால் அது பாஜகவிற்குத்தான் சாதகமாக முடியும். இப்படியே போனால் பாஜக பக்கம் பல அதிமுகவினர் தாவ நேரிடும்.. இப்படியே போனால் அவங்க கட்சிக்குள் வருவதை தடுக்க முடியாது என்று பாஜக குறித்து அதிமுகவினர் புலம்பி வருகிறார்கள்.

சசிகலா
இந்த சூழ்நிலையை பயன்படுத்திதான் சசிகலா காய் நகர்த்தி வருகிறார் என்கிறார்கள். கட்சியில் எம்எல்ஏக்கள் இடையே ஒற்றுமை இல்லை, தலைமையில் மோதல், முன்னாள் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பல காரணங்கள் நிலவுவதால், அதை பயன்படுத்தி, கட்சிக்குள் மீண்டும் அடியெடுத்து வைக்கும் வேலைகளை சசி தரப்பு செய்து வருகிறது என்கிறார்கள்.

சசிகலா கேம் பிளான்
இன்னும் 2 மாசம் பாருங்க.. ரொம்ப பெரிய மாற்றம் வரும். லாக்டவுன், கொரோனா காரணமாக சசிகலா வெளியே போகலை.. ஆனால் அவர் போனில் நகர்த்த வேண்டிய காய்களை எல்லாம் நகர்த்திக்கொண்டுதான் இருக்கிறார் என்கிறார்கள். நான்தான் கட்சியை காப்பாற்ற முடியும், நான்தான் மோதலை சரி செய்ய முடியும் என்று சசிகலா இப்போதே தூது அனுப்ப தொடங்கிவிட்டார் என்றும் கூறுகிறார்கள்.
Recommended Video

ஆனால்
அடுத்த இரண்டு மாதத்தில் சசிகலா பெரிய செக் வைப்பார் என்கிறார்கள். ஆனால் ஓபிஎஸ் இதற்கு அனுமதித்தாலும் சசிகலாவின் கம்பேக்கை இபிஎஸ் விரும்புவாரா என்பது சந்தேகம்தான். எப்படியாவது கட்சியை மொத்தமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் இபிஎஸ் இருக்கிறார். அதில் இதுவரை ஓரளவிற்கு வெற்றியும் கண்டுவிட்டார்... இதனால் சசிகலாவின் வரும் அவ்வளவு எளிதாக இருந்துவிடாது.. ஆனால் சசிகலாவும் அவ்வளவு எளிதாக இந்த வாய்ப்பை விட்டுவிடமாட்டார்!












Click it and Unblock the Notifications