ஓ.பி.எஸ். மகன் கனவை கலைத்த இ.பி.எஸ்... மத்திய அமைச்சராகும் வாசன்
சென்னை: மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழக கோட்டாவில் வாசன் இடம்பிடித்துவிடுவார் என்பதால் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்தரநாத் தரப்பு மிகுந்த அதிருப்தியில் உள்ளது.
ஒன் மேன் ஆர்மியாக அதிமுக சார்பில் நாடாளுமன்றத்துக்கு சென்றதால் எப்படியும் தனக்கு மத்திய அமைச்சர் பதவியோ அல்லது இணை அமைச்சர் பதவியோ கிடைக்கும் என ஓ.பி.ராவீந்தரநாத் குமார் எம்.பி. எதிர்பார்த்தார்.
ஆனால் அவரது எதிர்பார்ப்பை மூட்டை கட்டி வைக்கும் வகையில், சீனியர்களான தம்பிதுரை, முனுசாமி போன்றோரை அடுத்தடுத்து எம்.பி.க்களாக்கி பற்றாகுறைக்கு வாசனையும் எம்.பியாக்கி இருக்கிறார் எடப்பாடி.

ஒரே நபர்
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தமிழகத்தில் வெற்றிபெற்ற ஒரே நபர் ரவீந்தரநாத் குமார் மட்டுமே. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் தோல்வியை தழுவினால் அது தனது இமேஜை பாதிக்கும் என்பதால் மிகத் தீவிரமாக பணியாற்றி, நிர்வாகிகளை கவனித்து வெற்றிபெற வைத்தார். இப்படி வெற்றிபெற்ற ரவீந்தரநாத் குமார் தனக்கு தமிழக கோட்டாவில் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அதற்கு இடையூறாக சீனியரான வைத்திலிங்கம் எம்.பி. இருந்ததால் அப்போது அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

எதிர்பார்ப்பு
இதனிடையே விரைவில் மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றத்தில் உறுதியாக தனக்கு இடம் கிடைக்கும் என ஓ.பி.எஸ். மகன் நம்பிக்கொண்டிருந்தார். ஆனால் அந்த நம்பிக்கைக்கு வேட்டு வைக்கும் வகையில், அதிமுகவின் ஆதிகால சீனியர்கள் இருவருக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து தம்பிதுரையையும், முனுசாமியையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார் இ.பி.எஸ். இதனால் இந்த முறையும் ரவீந்தரநாத் மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தனது டெல்லி லாபி நிச்சயம் கைகொடுத்து தன்னை அமைச்சரவையில் இடம்பிடிக்க வைக்கும் என இன்னும் நம்புகிறார் ஓ.பி.ஆர்.

மோடி சாய்ஸ்
மத்திய அமைச்சரவையில் தமிழக பிரநிதியாக ஜி.கே.வாசனை ஏற்கனவே மோடியும், அமித்ஷாவும் தேர்வு செய்துவிட்டதாகவும், இதன் காரணமாகவே அவருக்கு ராஜ்யசபா சீட் கூட பெற்றுக்கொடுத்ததாகவும் டெல்லியில் ஒரு செய்தி உலா வருகிறது. மேலும், ஜி.கே.வாசன் போன்ற நபர் தான் ஓ.பி.எஸ். மகனுக்கு போட்டியை கொடுக்க முடியும் என்பது எடப்பாடியாரின் நம்பிக்கையாம். இதனால் தான் கேட்டதும் கட்சியினருக்காக பெயருக்கு தயங்கிவிட்டு பிறகு மன மகிழ்ச்சியுடன் வாசனுக்கு ராஜ்யசபா சீட்டை கொடுத்தாராம் எடப்பாடியார்.

டெல்லி லாபி
தம்பிதுரையை பொறுத்தவரை டெல்லி லாபி அத்துபடியான நபர். எங்கு சென்று யாரை சந்தித்தால் எதை சாதிக்கலாம் என்ற விவரம் அவருக்கு தெரியாதது அல்ல. அவர் பங்குக்கு ராஜ்யசபா உறுப்பினராக உள்ளே சென்றதும், மாநிலங்களவை துணைத் தலைவர் ஆக வேண்டும் என கற்பனை கோட்டையில் மிதக்கிறாராம்.
ஆசைப்பட யாருக்குத் தான் உரிமையில்லை..












Click it and Unblock the Notifications