கொரோனா காலத்தில் வழங்க மறுத்த 5000 ரூபாயை மக்களுக்கு வழங்க வேண்டும்.. முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கொரோனா காலத்தில் வழங்க மறுத்த 5000 ரூபாயினை, தற்போது புயல், மழையாலும் பாதிக்கப்பட்ட நிலையிலாவது மக்களுக்கு வழங்க முதலமைச்சர் பழனிசாமி முன்வரவேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இன்று (19-12-2020) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவள்ளூர் மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.

Opposition leader Stalin insist Edappadi Paniswami should give 5,000 rupees

திமுக தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: பழந்தமிழகத்தில் தொண்டை மண்டலத்தின் நுழைவு வாயிலாக இருந்த மாவட்டம் இது! பல்லவர்கள் தொடங்கி ஆங்கிலேயர்கள் வரை போர் செய்த பூமி இது! அனைத்துக்கும் மேலாக பிரிட்டிஷார் முதலில் வந்து இறங்கியது பழவேற்காடு உள்ளிட்ட இந்தப் பகுதியில் தான்! பழவேற்காடுக்கு வந்தவர்கள், மேடான ஒரு இடம் தேடி வந்தார்கள்.

அந்த இடத்தில் கோட்டை அமைத்தார்கள். அதுதான் இன்று சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஆகும். எனவே, கோட்டைக்கு பாதை அமைத்த மாவட்டம் இந்த திருவள்ளூர். மொழிவாரியாக இந்திய மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது திருத்தணியை ஆந்திர மாநிலத்தவர்கள் கேட்டார்கள்.
தமிழகத்துக்குத் தான் திருத்தணி சொந்தம் என்று ம.பொ.சி. அவர்கள் தலைமையில் பெரும் போராட்டம் நடந்தது. அதில் திராவிட முன்னேற்றக் கழகமும் தன்னை இணைத்துக் கொண்டு போராடியது.

சித்தூர் திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில் திருத்தணி, தமிழகத்துக்குத் தான் சொந்தம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மட்டுமல்லாமல், வட ஆர்க்காடு மாவட்டத்தினரை முழுமையாக இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள். இப்போராட்டத்தை முன்னெடுத்த ம,பொ.சி. அவர்களை அன்றைய பிரதமர் நேரு அவர்கள் கடுமையாக விமர்சித்தார் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்தவர் நம்முடைய அண்ணா அவர்கள்.

திருத்தணியைக் காக்க தமிழகம் முழுக்க ரயில் மறியல் போர் நடத்தி கைதான இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அப்போது அண்ணா, கலைஞர் உள்ளிட்ட அனைவரும் சிறை வைக்கப்பட்டதால் கழகத்தின் பொறுப்பாளராக ஏ.ஜி.என்று அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமியிடம் அண்ணா அவர்கள் ஒப்படைத்தார்கள்.

திமுகவினரின் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் 17 இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் கழகத் தொண்டர்கள் நான்கு பேர் மரணம் அடைந்தார்கள். இப்படி திருத்தணி கோவிலோடு சேர்த்து ஊரையும் காத்த இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். கழகத்தின் நிர்வாக வசதிக்காகவும், வளர்ச்சிக்காகவும் திருவள்ளூர் மாவட்டமானது மூன்றாகப் பிரிக்கப்பட்டது.

மத்திய மாவட்டச் செயலாளராக ஆவடி நாசரும்- மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக பூபதியும் - கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக கோவிந்தராசனும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இன்றைய தினம் திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் தமிழகம் மீட்போம் என்ற பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூபதி, கோவிந்தராசன் ஆகிய இருவருக்கும் புதிதாக பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீபெரும்புதூரில், இருங்காட்டுக் கோட்டையில், கும்மிடிப்பூண்டியில் முதல்வர் கலைஞரால் உருவாக்கப்பட்ட தொழில் வளாகங்களைக் காட்டுங்கள்!
அம்பத்தூரை, மணலியை, திருவள்ளூரை, மறைமலை நகரைச் சுற்றிக் காண்பியுங்கள். எத்தனை தொழிற்சாலைகள், எத்தனை நிறுவனங்கள், எத்தனை புதுப்புது திட்டங்கள், அத்தனையும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டவை.

கார் உற்பத்தி தொழிற்சாலைகள் முதல் கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலைகள் வரை கலைஞர் காலத்தில் தொடங்கப்பட்டவை. உலோகத் தகடு முதல் ஏர் கண்டிஷன் வரை தயாரிக்கும் தொழிற்சாலைகளைத் திறந்து வைத்துள்ளோம். திருவள்ளூர், காஞ்சிபுரம் எல்லையைச் சுற்றி வந்தாலே தி.மு.க.வின் சாதனைகள் தெரியும். வல்லூர் அனல்மின் நிலையம் உருவாக்கியது கழக ஆட்சி! மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் காட்டுப்பள்ளியில் கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் கொண்டு வந்தது கழக ஆட்சி! தொழில் வந்தது, தொழில் வளர்ந்தது, தொழிலாளர்கள் வளர்ந்தார்கள், தமிழகம் வளர்ந்தது. அதன் மூலமாக இந்தியாவும் வளர்ந்தது.
இப்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சொல்ல முடியும்! அதனால் தான் இது நாங்கள் உருவாக்கிய தமிழ்நாடு என்று நான் சொன்னேன்!.

* தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கழக ஆட்சியில் உருவாக்கப்பட்டது!

* தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் கழக ஆட்சியில் உருவாக்கப்பட்டது!

* ஏழைப்பிள்ளைகளுக்கு இளங்கலை வரை இலவசக் கல்வி!

* கல்வி வளர்ச்சியைப் பற்றி ஆலோசனை சொல்ல மால்கம் ஆதிசேஷய்யா தலைமையில் ஆணையம்!

* மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!

* ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி,வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு!

* பெண்களுக்கு இடஒதுக்கீடு!

* அரசுப்பணியில் சேர வயது வரம்பை திமுக அரசு கூட்டியது

* மாதம் ஒரு தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்றார் முதலமைச்சர் கலைஞர்!

* பத்து கிராமங்களுக்கு ஒரு தொழிற்சாலை தொடங்க உத்தரவிட்டார்!

* சாலைப்பணியாளர்களை நியமித்தார்!

* மக்கள் நலப்பணியாளர்களை நியமித்தார்!

* தொழிற்பேட்டைகள் அமைத்தார்!

* ஏராளமான கல்லூரிகள் அமைத்தார்!

* பல்கலைக்கழகங்களை உருவாக்கினார்!
_ இப்படி இளைய சக்தியை கல்வித் தகுதி உள்ளவர்களாக, வேலைக்கு தகுதி படைத்தவர்களாக உருவாக்குவதில் அக்கறை கொண்ட அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருந்தது.

தரமணியில் உள்ள டைட்டல் பார்க், முதலமைச்சர் கலைஞர் அவர்களால் கட்டப்பட்டது! உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டு இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தது திமுக!

ஊரடங்கைத் தளர்த்தினால் திமுகவினர் கூட்டம் போட்டுவிடுவார்கள் என்பதற்காகவே ஊரடங்கை நீடித்துக் கொண்டே இருந்தார் பழனிசாமி என்பது எங்களுக்குத் தெரியாதது அல்ல.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவி தமிழ்நாட்டு மக்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டது. எடப்பாடி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணத்தால் இதுவரை 8,04,650 லட்சம் பேர் பாதிக்கப்பட்டார்கள். 11,954 உயிர்களை நாம் இழந்தோம்.

பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று நான் திரும்பத் திரும்பச் சொன்னேன். அதை எடப்பாடி அரசு தரவில்லை. ஆனால், இன்று திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொங்கல் பண்டிகைக்காக 2,500 ரூபாய் தரப்போவதாக அறிவித்துள்ளார். மக்கள் கஷ்டப்படும் போது தராமல், தற்போது நான்கு மாதங்களில் தேர்தல் வருவதால், தனது சுயநலத்திற்காகத் தருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொடுக்கட்டும் பரவாயில்லை. கொரோனாவிலும் பாதிக்கப்பட்டு, அண்மையில் ஏற்பட்ட புயல், மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ரூபாய் நிதியுதவியை இப்போதாவது வழங்குங்கள் என்று தி.மு.க சார்பிலும், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிலும் மீண்டும், மீண்டும் முதலமைச்சர் திரு. பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, நடுத்தர மக்களுக்காக 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தைத் தொடங்கி அவர்களுக்குத் தேவையான பொருட்களை கழக நிர்வாகிகள் வழங்கினார்கள். அரிசி,பருப்பு ஆகிய உணவுப் பொருட்களைக் கொடுத்தோம்! உணவாகவும் தயாரித்துக் கொடுத்தோம்!
பல ஊர்களில் நிதி உதவியும் செய்யப்பட்டது. கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை விதைத்தோம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டோம். இந்தக் கொரோனா காலத்திலும் மக்களைக் காத்தோம். இத்தகைய கருணை உள்ளம் கொண்ட உடன்பிறப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் என்பதில் நான் மகிழ்ச்சியில் திளைக்கிறேன்!

ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை, எதிர்க்கட்சியாக இருந்த போதே செய்யும் வல்லமை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உண்டு. திமுக தொண்டனுக்கு உண்டு. அப்படியானால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கையில் ஆட்சி இருந்தால்... மக்களை இன்னும் பல மடங்கு மகிழ்ச்சியில் வைக்க முடியும்.
தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த திருவள்ளூர் மாவட்டப் பொதுக்கூட்டத்தின் வாயிலாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்று தான்!
உங்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் ஓடி வருபவன் உதயசூரியன் என்பதை மறவாதீர்கள்! இது நிரூபிக்கப்பட்ட உண்மை! இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+