ஹிஜாப் அணிந்தால் வராதீங்க.. மாணவியின் பெற்றோரை திருப்பி அனுப்பிய தாம்பரம் பள்ளி! வலுக்கும் எதிர்ப்பு
சென்னை: கர்நாடகத்தை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு வந்த பெண்ணிடம் ஹிஜாப் அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் செல்ல எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் போராட்டங்கள் அரங்கேறின. கல்வி நிறுவனங்களில் யூனிபார்ம் முறையை பின்பற்ற அம்மாநில அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கினர். இதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் தடை
இதனால் கர்நாடக கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல கூடாது என்பது நடைமுறையில் உள்ளது. இதனால் பல மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வை கூட புறக்கணித்துள்ளனர். தற்போது பியூசி 2ம் ஆண்டு தேர்வு நடைப்பெற்றாலும் ஹிஜாப் அணிந்து எழுத மாணவிகளுக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து மாணவிகள் ஹிஜாப்பை அகற்றி தேர்வு எழுதி வருகின்றனர்.

சென்னையில் எதிர்ப்பு
இதையடுத்து கர்நாடகம் தவிர சில மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் ஹிஜாப், திருநீர், ருத்ராட்சம் அணிந்து வரக்கூடாது என சில ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாக அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. இந்நிலையில் தான் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

பள்ளியில் சேர்க்கை
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் சங்கர வித்யாலாயா பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தினமும் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர், மாணவர்கள் வந்து செல்கின்றனர். அதேபோல் 4 வயது குழந்தையை எல்கேஜியில் சேர்க்க முஸ்லிம் தம்பதி பள்ளிக்கு சென்றனர்.

ஹிஜாப்புக்கு எதிர்ப்பு
அப்போது அந்த பெண் ஹிஜாப் அணிந்திருந்தார். இந்த வேளையில் பள்ளியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஹிஜாப்பை அகற்றும்படி கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது ஹிஜாப்பை அகற்றிவிட்டு தான் பள்ளியில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் வார்த்தை போர் வெடித்தது. இதையடுத்து அவர்கள் பள்ளியில் இருந்து வெளியே வந்தனர்.

போலீசில் புகார்
இதுகுறித்து சேலையூர் போலீசில் புகார் செய்தனர். மனித நேய மக்கள் கட்சியினர், தமுமுகவினர் உடனிருந்தனர். புகாரை பெற்று கொண்ட போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மதுரை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது மேலூரில் உள்ள ஒரு பூத்தில் ஹிஜாப் பிரச்சனை வெடித்தது. இதையடுத்து பாஜக முகவர் வெளியேற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது பள்ளி அளவில் ஹிஜாப் தடை தொடர்பான பிரச்சனை உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications