தந்தையர் தினம் - அப்பா ஒரு சகாப்தம்... ஓபிஎஸ், விஜயபாஸ்கர் ட்வீட்
தந்தையர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: குடும்பத்தலைவர் அப்பா, எத்தனையோ கஷ்டங்களை தாங்கிக் கொண்டு நேரம் காலம் பார்க்காமல் உழைத்து குடும்பத்தை காக்கும் கடவுள் என்றால் மிகையாகாது. அப்பாவை கொண்டாட ஒரு நாள் போதாது என்றாலும் அப்பாவிற்காக ஜூன் 3வது ஞாயிறு கிழமை தந்தையர் தினம் கொண்டாடுகின்றோம்.
இந்த தந்தையர் தினத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தங்களின் தந்தையர் தின வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
என் அப்பா என் ஹீரோ என் இன்ஸ்பிரேசன் - பிரபலங்களில் தந்தையர் தின பதிவு
வள்ளுவரின் குறளை மேற்கோள் காட்டியும், அழகான கவிதை வடிவிலும் அப்பாக்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்.
உடல் பொருள் ஆவி
"தந்தை மகற்கு ஆற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல்" எனும் வள்ளுவர் வாய்மொழி நின்று தனது உடல்,பொருள்,ஆவி அனைத்தும் நல்கி தான் பெற்ற மக்களின் நலம் பேண தினம் உழைக்கும் தந்தைமார்கள் அனைவருக்கும் இந்த இனிய தந்தையர் தின நாளில் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
போற்றுதலுக்கு உரிய அப்பாக்கள்
உண்ணாமல், உறங்காமல், ஓய்வறியா உழைப்பினை நாளும் நல்கி தன் மக்களது வாழ்வின் இன்பமே எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் போற்றுதலுக்குரிய அன்புத் தந்தைமார்கள் அனைவருக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
அப்பா ஒரு சகாப்தம்
அப்பா ஒரு சகாப்தம்!
கைகளில் தாங்கியபோது
அன்னையாக
விரல் பிடித்து வழி நடத்தியதில்
குருவாக
தோளணைத்து ஆறுதல் தருகையில்
தோழனாக
எம்மக்களோடு தவழ்கையில் எமது குழந்தையாக
வாழும் அவதாரமே அப்பா..தன்னை கரைத்து எம்மை கரை சேர்க்கும்
பாசப்பெருங்கடல் அப்பா
தந்தையர் தின வாழ்த்துகள் ! #FathersDay