அதிமுக நுரை பூ அல்ல, ஊதி விளையாட; நெருப்பில் பூத்த மலர்.. ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக ஆவேச அறிக்கை
சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நெருப்பில் பூத்த மலர்! நுறை பூ அல்ல ஊதி விளையாட நினைவில் கொள்க என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஓபிஎஸ் இபிஎஸ் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: "ஏழை எளிய நடுத்தர மக்கள் தங்கள் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று நிம்மதியுடன் வாழ வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் பேரியக்கத்தை தோற்றுவித்து, அவர் நினைத்ததை செயல்படுத்திக் காட்டினார். அதேபோல் புரட்சித் தலைவரின் வழித்தோன்றலாக திகழ்ந்த ஜெயலலிதா மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார்.
நம் இருபெரும் தலைவர்களும் பல்வேறு சோதனைகளையும் வேதனைகளையும் இன்னல்களையும் சவால்களையும் சந்தித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை கட்டிக்காத்து ஒரு மாபெரும் இயக்கமாக வளர்த்து வந்துள்ளார்கள். அந்த வகையில் கழகத்தையும் தொண்டர்களையும் நாளும் பொழுதும் கண்ணெனக் காத்து வருகிறோம். தொடர்ந்து தொய்வில்லாமல் மக்கள் பணிகளை ஆற்றி வருகிறோம்.

திமுக மீது தாக்கு
இந்நிலையில் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து திமுகவின் இயற்கை குணாதிசயங்கள் தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்க தொடங்கிவிட்டன . பத்தாண்டு காலம் தலைகாட்டாத மின்வெட்டு இப்பொழுது மாநிலம் முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது. பட்டப்பகலில் சட்டவிரோத செயல்களில் எவ்வித கூச்சமும் அச்சமும் என்று திமுகவினர் வெட்ட வெளிகளிலும் வீதிகளிலும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அலுவலகங்கள் சுதந்திரமாக பணி செய்ய முடியாத அளவுக்கு ஆளும் கட்சியினரின் தலையீடும், உருட்டல் மிரட்டல்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆட்சிக்கு வந்து ஒரு மாதமே முடிந்த நிலையில் வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில் முதலிடம் இடம்பெற்ற ஆட்சியாக திமுக ஆட்சி தனது இருப்பையும் இயல்பையும் காட்டிக் கொள்கிறது.

வன்முறை தாக்குதல்
ஜனநாயகத்தின் ஆணிவேராக விளங்கக்கூடிய கருத்து சுதந்திரத்தை நசுக்குவதில் திமுகவினர் தங்களது முழு வரம்பு மீறலையும் மாநிலம் எங்கும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆளுங்கட்சியினரின் தவறுகளையும் தலையீடுகளும் வெளிச்சத்திற்கு கொண்டுவரும் அடிப்படை அரசியல் கடமையில் ஈடுபட்டு இருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மீது வன்முறை தாக்குதல்களை ஏவி விடுவதில் திமுகவினர் மாநிலத்தின் பல இடங்களில் தீவிரமாக உள்ளனர். காவல்துறையினரின் துணைகொண்டு கழகத் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மீது வன்முறை தாக்குதல்களையும் பொய் வழக்குப் போடும் அடாத செயல்களிலும் திமுகவினர் ஈடுபடும் நிகழ்வுகள் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

ஓபிஎஸ் இபிஎஸ் கண்டனம்
திமுகவினரின் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். ஆற்ற வேண்டிய பணிகள் ஆயிரம் இருக்கையில் அராஜகத்திற்கு துணைபோகும் செயலில் ஆளுங்கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

ஐடி விங்க் பணியாளர்கள்
பழிவாங்கும் நோக்கத்தோடு அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மீதும் , ஆட்சியின் அலங்கோலங்களை தட்டிக்கேட்கும் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மீதும் பொய் வழக்குப் போடுவதும் தாக்குதல் நடத்துவதுமான செயல்களை திமுக தலைமை தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

உதவி செய்வோம்
பாதிக்கக்கூடிய தகவல் தொழில்நுட்ப பிரிவினைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய மாவட்ட மாநகர நகர ஒன்றிய பேரூராட்சி கழக நிர்வாகிகளும் கழக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடன் கலந்து பேசி அவர்களுக்கு தகவல் தெரியப்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் எதிர்த்துக் களம் ஆடுவதற்கு கழக வழக்கறிஞர் பிரிவு தயார்நிலையில் இருக்கிறது. அதை தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கழக வழக்கறிஞர் பிரிவு எதிர்க்கட்சி என்ற பிரதானமான வாய்ப்பை பயன்படுத்தி சட்ட நெருக்கடியை திமுகவிற்கு மதன் தலைமையிலான அரசுக்கும் தருவதற்கு தயாராக இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தப்பு கணக்கு வேண்டாம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புது வெள்ளத்தில் மிதந்து வரும் நுரை பூ அல்ல. தொண்டர்களின் வீரத்திலும் தியாகத்திலும் விளைந்திட நெருப்பில் பூத்த மலர். எந்த அச்சுறுத்தலும் எங்கள் இயக்கத்தை நெருங்க முடியாது. அமைதியாகவும் பொறுப்புணர்ச்சியுடன் ஜனநாயக கடமை ஆற்றி வரும் கழகத்தினரையும், பல்வேறு அணியினரையும், தகவல் தொழில்நுட்ப பிரிவினரையும் , அச்சுறுத்துவதால் அடங்கி போகும் என்று தப்புக் கணக்குப் போடாமல், தலைகால் தெரியாமல் ஆட்டம் போடாமல் நல்லாட்சி நடத்துவதில் கருத்தையும் செலுத்துவது, வாக்களித்த மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை கடமை திமுகவுக்கு இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்." இவ்வாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications