கன்ஃபார்ம் ஆன கணிப்பு.. ஓபிஎஸ் பேசியது கேட்டுச்சா? சசிகலா அன்றே சொன்னாரே! டீ யுடன் கலக்குமா வெல்லம்?
சென்னை: ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இன்று ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள பேட்டி கடந்த சில நாட்களுக்கு முன் சசிகலா அளித்த பேட்டியுடன் ஒத்துபோகிறது.
Recommended Video
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் தடைகள், வழக்குகள், போராட்டங்களை கடந்து கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூடியது. அதில் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அனைவரும் எதிர்பாத்ததைபோல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர், ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். ஓபிஎஸும் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோரை நீக்குவதாக அறிவித்தார்.

ஓபிஎஸ் வழக்கு
இந்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ஐகோர்ட் உத்தரவு
இந்த நிலையில் நேற்று காலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கிற்கான தீர்ப்பை வெளியிட்டார். அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று தெரிவித்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், ஜூலை 23க்கும் முன் கட்சியில் இருந்த நிலையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பழைய நிலை
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து உள்ள இந்த அதிரடி உத்தரவினால் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாமல் போயுள்ளது. எனவே இனி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை. அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லாது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் பயணித்தால் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது. அதிமுக ஒன்றுபட்ட போது அதை யாராலும் வீழ்த்த இயலவில்லை. நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். கடந்தவை கடந்தவைகளாக இருக்கட்டும். அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட விரும்புகிறார்கள். அதிமுகவில் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட வேண்டும்." என்று கூறினார்.

சசிகலா அன்றே சொன்னது
கடந்த ஜூலை 31 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சசிகலா அதிமுகவில் சாதி, மதம் பார்க்காமல் அனைவரும் ஒன்று என்ற அடிப்படையிலேயே நகர்வுகள் இருக்கும் என்று கூறினார். தாங்கள் இபிஎஸ் பக்கம் உள்ளீர்களா அல்லது ஓபிஎஸ் பக்கம் இருக்கிறீர்களா என்று தான் யார் பக்கமும் இல்லை என தெரிவித்தார். இதேபோல் கடந்த 10 ஆம் தேதி சசிகலா அளித்த பேட்டியில், அதிமுக ஒன்றாகவிடாமல் சிலர் தடுக்கிறார்கள். அதிமுக பிரிந்தால் லாபம் திமுகவுக்கே என்று கூறினார்.

உறுதியான கணிப்புகள்
ஓ.பன்னீர்செல்வம் இன்று அளித்த பேட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பாக சசிகலா அளித்த பேட்டிகளுடன் ஒத்துப்போகிறது. அத்துடன் ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக வெளியான தகவல்களும், அரசியல் கணிப்புகள் இதன் மூலம் உறுதியாகின்றன. அத்துடன் இருவரும் எடப்பாடியையும் தங்களோடு சேர்த்து ஒற்றுமையாக பயணிக்க திட்டமிட்டுள்ளதும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications