ஒருங்கிணைப்பாளர் பதவி முக்கியமானது! எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக்கவே என்னை நீக்கினர்- ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக்கவே என்னை நீக்கியுள்ளனர் என ஓபிஎஸ் வாதம்
சென்னை: எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக்குவதற்காக என்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர் என ஓபிஎஸ் தரப்பு வாதத்தை வைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழுவில் வைத்து ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்து இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இந்த பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இதன் தீர்ப்பு வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 24 ஆம்தேதி நடத்தப்படுகிறது. இதை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் நீதிமன்றத்தை நாடினார்.

அவசர வழக்கு
அவசர வழக்காக இந்த வழக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரிக்கப்பட்டது. அப்போது விதிகளின்படி பொதுச் செயலாளர் தேர்தல் நடத்திக் கொள்ளலாம். ஆனால் அதன் முடிவுகள் தற்போது அறிவிக்கக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன் வைத்து வருகிறார்.

பொதுச் செயலாளர்
அவர் கூறுகையில் பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பெற முக்கிய பதவி வகித்த என்னை நீக்கியுள்ளார்கள். ஒருங்கிணைப்பாளரை நீக்க கட்சியில் விதிகள் இல்லை. இரட்டை பதவிகள் காலியானதாக எந்த நீதிமன்றமும் கூறவில்லை. எனவே பொதுக் குழுவில் எடுத்த தீர்மானங்கள் செல்லாது. ஜூலை 11 ஆம் தேதி நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடாமல் சிறப்பு தீர்மானம் போட்டு ஓபிஎஸ்ஸை நீக்கியுள்ளனர்.

சிறப்பு தீர்மானம்
சிறப்பு தீர்மானம் மீது பொதுக் குழுவில் எந்த விவாதமும் நடத்தவில்லை. பொதுக் குழுவில் தீர்மானமே கொண்டு வராமல் இரட்டை தலைமை காலாவதியானதாக எப்படி கூற முடியும்? அடிப்படை உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கும் விதியை பின்பற்றியே ஒருங்கிணைப்பாளர் நீக்கப்பட்டுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பொதுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை.

காலாவதியாகவில்லை
பொதுக்குழு உறுப்பினர்களே ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்டவர்கள்தான். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை. திமுகவுடன் நெருக்கம் காட்டியதாக எளிதான ஒரு காரணத்தை கூறி என்னை நீக்கியுள்ளார்கள். என்னை நீக்கிய முறை எம்ஜிஆரின் கொள்கைக்கு விரோதமானது. இவ்வாறு ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக இந்த வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications