இது “திராபை மாடல்” அரசு.. எல்லாமே ஏமாற்று வேலை -சொன்னீங்களே! செஞ்சீங்களா? ஓபிஎஸுக்கு வந்துச்சே கோபம்
சென்னை: அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதை தாமதப்படுத்தும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்து உள்ள அறிக்கையில், "அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், புதிதாக 2 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என இரண்டு வாக்குறுதிகள் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தி.மு.க.வின் கணக்குப்படி பார்த்தால், 2021 ஆம் ஆண்டே அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் 3.5 இலட்சம் பணியிடங்கள் காலி. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரித்து இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

வயது வரம்பு உயர்வு
கொரோனா பாதிப்பு காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பினை உயர்த்தியது. ஆனாலும், பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் மெத்தனப் போக்கை தொடர்ந்து தி.மு.க. அரசு கடைபிடித்து வருகிறது.

சிகிச்சை அளிக்கப்படாத நோயாளி
காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காமல் வயது வரம்பை உயர்த்துவது என்பது சிகிச்சையே அளிக்காமல் நோயாளியை மருத்துவமனையில் வைத்திருப்பதற்கு சமம். வாக்குறுதி என்பது ஐந்தாண்டுகளுக்கு என்ற தி.மு.க.வின் கணக்குப்படி பார்த்தாலும், மூன்றரை இலட்சம் காலிப் பணியிடங்களை ஐந்தாண்டுகளில் நிரப்ப வேண்டுமானால், ஓராண்டிற்கு 70,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

புதிய தேர்வு அட்டவணை
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 10,000 காலிப் பணியிடங்களைக் கூட நிரப்பியதாகத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான புதிய தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில், வெறும் 1,754 பணியிடங்களுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு
பெரும்பாலானோர் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த குரூப் - 4 பதவிகளுக்கான தேர்வின் அறிவிக்கை நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும், அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கால தாமதம் ஏன்?
அனைத்து அரசுத் துறைகளிலும் பணியாளர்கள் பற்றாக்குறை வெகுவாக இருக்கின்ற நிலையில், இதனை தி.மு.க.வே தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருக்கிற நிலையில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நிலையில், அதனை உடனுக்குடன் நிரப்புவதில் தாமதம் ஏன் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

குரூப் 4 முடிவில் ஏன் தாமதம்?
குரூப் - 4 தேர்வு எழுதி கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகியும் அதற்கான முடிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் அடுத்தத் தேர்வு 2024 ஆம் ஆண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடத்துவதில் தான் தாமதம் என்றால், முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் என்ற நிலை நிலவுகிறது.

ஏமாற்றம் அளிக்கிறது
மத்திய அரசுப் பணியிடங்களை நிரப்பும் பணியாளர் தேர்வு வாரியம், வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் தேர்வு வாரியம் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் பட்டதாரி நிலை, மேல்நிலைப் பள்ளி நிலை ஆகியவற்றிற்கான தேர்வுகளை உடனுக்குடன் நடத்தி அதன் முடிவுகளை வெளியிடுகின்ற நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்துவதில் காலந்தாழ்த்துவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. மாறாக ஏமாற்றம் அளிக்கும் செயல்.

திராபை மாடல்
இந்த நிலை நீடித்தால் ஐந்தாண்டுகளில் மூன்றரை இலட்சம் அல்ல, முப்பத்தைந்தாயிரம் பணியிடங்களைக் கூட தி.மு.க. அரசால் நிரப்ப முடியாது. இதிலிருந்தே தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. இது 'திராவிட மாடல்' அரசு அல்ல, 'திராபை மாடல்' அரசு, அதாவது எதற்கும் உபயோகமில்லாத பயனற்ற அரசு.

உள்நோக்கம் உள்ளதா?
தமிழ்நாடு அரசுத் துறைகளிலும், கல்வி நிலையங்களிலும் இலட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் இருக்கின்ற சூழ்நிலையில், இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த குரூப் - 4, குரூப் - 2, 2A ஆகியவற்றிற்கான தேர்வுகளை 2023 ஆம் ஆண்டு நடத்தாமல் காலந்தாழ்த்துவது இந்த அரசு ஏதோ உள்நோக்கத்துடன் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

இளைஞர்கள் அச்சம்
நிதிநிலை அறிக்கையில், 'நிதிப் பற்றாக்குறை' குறைந்துவிட்டது, 'வருவாய் பற்றாக்குறை' குறைந்துவிட்டது என்று சொல்வதற்காக இதுபோன்ற காலந்தாழ்த்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு இருக்கிறதோ என்ற சந்தேகமும், வெளி முகமையின் மூலமாக பணிகளை மேற்கொண்டு விடலாம் என்ற நினைப்பில் அரசு இருக்கிறதோ என்ற ஐயமும் இளைஞர்கள் மனதில் மேலோங்கி இருக்கிறது.

ஏமாற்று வேலை
இந்த இலட்சணத்தில் இரண்டு இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குப்படும் என்ற வாக்குறுதி வேறு! எல்லாம் ஏமாற்று வேலை! பற்றாக்குறையை குறைக்கிறோம் என்று சொல்லி இதுபோன்ற நடவடிக்கையை அரசு எடுக்குமேயானால், அது ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை, இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை குலைக்கும் நடவடிக்கையாகும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications