பெண் பழ வியாபாரி கொலை.. சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வெறிச்செயல்.. ஓபிஎஸ் கண்டனம்
சென்னை: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணை கொலை செய்துவிட்டு கொலையாளிகள் அதே ரயிலில் தப்பி சென்றது குறித்து ஓ பன்னீர் செல்வம் ஆவேசம் தெரிவித்துள்ளார்.
சென்னை மின்சார ரயிலில் சமோசா, பழங்களை விற்பனை செய்து வந்தவர் ராஜேஸ்வரி. இவர் மீனம்பாக்கத்தைச் சேர்ந்தவர். நேற்று இரவு எழும்பூரில் இருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் ராஜேஸ்வரி வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது இரவு 8.30 மணிக்கு அந்த ரயிலில் பயணம் செய்த 4 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கொடூரமாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அந்த பெண் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில், கடற்கரை - தாம்பரம் புறநகர் இரயிலில் பயணித்து வந்த பழ வியாபாரம் செய்யும் பெண்மணி இராஜேஸ்வரி என்பவர் சைதாப்பேட்டை இரயில் நிலையத்தில் இறங்கியபோது மர்ம நபரால் சரமாரியாக வெட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. உயிரிழந்த இராஜேஸ்வரி அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மாநகரத்தின் மையப் பகுதியாகவும், எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகவும் விளங்கும் சைதாபேட்டை இரயில் நிலையத்தில் இந்தப் படுகொலை நடைபெற்றுள்ளதும், இந்த வெறிச் செயலைச் செய்தவர் அதே இரயிலில் ஏறி தப்பித்துள்ளதையும் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் சுதந்திரமாக மக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதும், சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதும் தெளிவாகிறது. தலைநகரம் கொலை நகரமாக மாறியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்த பழ வியாபாரியின் குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்றும், கொலையாளியை விரைந்து கண்டுபிடித்து, சட்டத்தின் முன்நிறுத்தி, தண்டனைப் பெற்றுத் தர வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications