அதிமுகவின் உண்மையான உரிமையாளர் மோடியாம்! ஒப்புதல் அளித்தது பன்னீர் செல்வமாம்! ஜோதிமணி ‛சுளீர்’
சென்னை: ‛‛அதிமுகவின் உண்மையான உரிமையாளர் நரேந்திர மோடி என்று ஓ பன்னீர் செல்வம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால்ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது எட்டிக்கூடப் பார்க்காதவர் நரேந்திர மோடி என்பதை அதிமுக தொண்டர்கள் நினைவில் கொள்ள வேண்டும் '' என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி செய்துள்ளார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் உள்ளார். துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். இந்நிலையில் தான் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
இதற்கிடையே ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் தனித்தனியே போஸ்டர்கள் ஓட்டி வருகின்றனர். இதனால் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.

தொடர்ந்து ஆலோசனை
அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்து தங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓ பன்னீர்செல்வம் இன்றும் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது தம்பிதுரை ஓ.பன்னீர்செல்வதை நேரில் சந்தித்துப் பேசினார். இதற்கிடையே அதிமுக மாவட்ட செயலாளர்களை அணி சேர்ப்பதற்கு ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பன்னீர் செல்வம் பேட்டி
இந்நிலையில் நேற்று இரவு செய்தியாளர்களை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் சந்தித்த அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது, ‛‛அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே கட்சி சட்ட விதி. ஜெயலலிதா மறைவுக்கு பின் நானும் பழனிசாமியும் இணைந்தபோது பொதுச்செயலாளர் பதவியில் யாரும் இருக்கக் கூடாது என முடிவு செய்து இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது.

மோடி சொன்னதால் தான்..
அப்போது எனக்கு துணை முதல்வர் அமைச்சர் பதவி தேவை இல்லை என்றேன். என்னை ஒருங்கிணைப்பாளராக்கினர். 2 நாட்கள் கழித்து ஒவ்வொரு நடவடிக்கையிலும் இருவரும் கையெழுத்திட உரிமை உள்ளது என்றனர். அதற்கு மதிப்பளித்து இருவர் கையெழுத்திடுவதை ஏற்றேன். பிரதமரை சந்தித்தபோது அவர் துணை முதல்வர் பதவியை ஏற்கும்படி அழுத்தம் கொடுத்ததால் ஏற்றேன்; நன்றாகத் தான் போனது. ஒற்றைத் தலைமை கோஷம் ஏன் உருவானது என்பது எனக்கே தெரியவில்லை'' என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கூறினார்.

ஜோதிமணி விமர்சனம்
ஓ. பன்னீர் செல்வத்தின் இந்த பேச்சு தற்போது பெரும் விவாதப்பொருளாகி உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், கரூர் எம்பியுமான ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில், "அதிமுகவின் உண்மையான உரிமையாளர் நரேந்திர மோடி தான் என்று ஓபிஎஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது எட்டிக்கூடப் பார்க்காதவர் நரேந்திர மோடி என்பதை அதிமுக தொண்டர்கள் நினைவில் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications