திமுகவில் ஐக்கியமான ஓபிஎஸ்.. மதுரை டூ நெல்லை.. முக்குலத்தோர் வாக்குகளை அள்ளும் திமுக!
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பது சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. முக்குலத்தோர் சமூக பிரதிநிதியாக ஓபிஎஸ் பார்க்கப்பட்ட சூழலில், தென் மாவட்டங்களில் திமுகவுக்கு கூடுதல் ஆதரவு இருப்பதாக இருக்கும் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டின் முதல்வராக 3 முறை பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், திமுகவில் இணைந்திருக்கிறார். அண்ணா அறிவாலயத்திற்கு தனது மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் வந்த ஓபிஎஸ், திமுகவின் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்தினார். தமிழக அரசியலின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக இது அமைந்துள்ளது.

திமுகவில் ஓபிஎஸ்
திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்தை ஆரத்தழுவி வரவேற்று, திமுக கரை துண்டு அணிவித்து முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். அதிமுகவில் கிளைச் செயலாளர் தொடங்கி ஒருங்கிணைப்பாளர் பதவி வரை வகித்துள்ள ஓபிஎஸ், தற்போது திமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார். சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் சுழலில், ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பது திருப்புமுனையாக அமைந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் நடந்தது என்ன?
கடந்த லோக்சபா தேர்தலில் முக்குலத்தோர் சமூக வாக்குகளை அறுவடை செய்வதற்காக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பாஜக தங்கள் பக்கம் இழுத்து கூட்டணி அமைத்தது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. மதுரை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 2வது இடத்தை பிடித்தது.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
இதில் கன்னியாகுமரி தவிர்த்து அத்தனை மாவட்டங்களும் முக்குலத்தோர் சமூக மக்கள் அதிகம் இருக்கும் மாவட்டங்களாகும். இதன் காரணமாக பாஜக அதிக வாக்குகளை பெற முடிந்தது. இதற்கு ஓபிஎஸ் மிக முக்கியமான காரணமாகவும் அமைந்தார். பாஜகவுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரச்சாரம் மேற்கொண்டார். 40 வயதிற்கு மேலானவர்கள் பலரும் ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருந்தனர்.
முக்குலத்தோர் சமூக வாக்குகள்
குறிப்பாக கிராமப்புறங்களில் ஓபிஎஸ்க்கு இப்போதும் செல்வாக்கு இருந்து வருகிறது. இப்படியான சூழலில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பது மிகப்பெரிய திருப்புமுனையை தேர்தலில் ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. ஏனென்றால் முக்குலத்தோர் சமூக வாக்குகளை அறுவடை செய்யவே டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டார்.
எடப்பாடிக்கு செக்
ஆனால் தற்போது மறவர் சமூகத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருக்கிறார். மதுரை தொடங்கி ராமநாதபுரம், நெல்லை, தேனி, சிவகங்கை, விருதுநகர், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் முக்குலத்தோர் சமூக மக்கள் உள்ளனர். ஏற்கனவே சசிகலா தரப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பி இருக்கிறது.
மதுரை வரும் மோடி
இதனால் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவு திமுகவுக்கு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் முக்குலத்தோர் சமூக மக்கள் அதிகளவில் இருக்கின்றனர். மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கு வரவிருக்கும் சூழலில், மிக முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஓபிஎஸ்ஸை திமுக தூக்கி இருப்பது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications