நவம்பர் 24-ம் தேதி அதிமுக பொதுக்குழு... பரபரக்கும் அரசியல் களம்
Recommended Video
சென்னை: நவம்பர் 24-ம் தேதி சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.ஆகியோர் அறிவித்துள்ளனர்.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸில் நவ.24-ம் தேதி காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுக்குழு நவம்பர் 10-ம் தேதி நடைபெறும் சூழலில், அதிமுக பொதுக்குழு 24-ம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

நவ.24-ல் கூட்டம்
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதணன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.கேட்டுக்கொண்டுள்ளனர்.

வானகரம் தேர்வு
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் தான் நடைபெறும். ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் பொதுக்குழுவை கூட்டுவது ஜெயலலிதா வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், முன் கூட்டியே அதிமுக பொதுக்குழுவுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா வழியில் அவர் உயிருடன் இருந்தபோது நடத்தப்பட்ட அதே மண்டபத்தை அதிமுக தலைமை தேர்வு செய்திருக்கிறது.

அமைப்பில் மாற்றம்?
அதிமுக பொதுக்குழுவில் உள்ளாட்சித் தேர்தல் பற்றியும், கட்சியின் அமைப்பு ரீதியாக சில மாற்றங்களை கொண்டு வருவது பற்றியும், விவாதிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும், இளைஞர்களை அதிகளவில் கட்சியில் இணைப்பது பற்றியும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கிறது.

2 ஆண்டுகளுக்கு பின்பு
கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் அதிமுகவில் கடைசியாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதற்குபிறகு 2018-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய பொதுக்குழுவை கட்சித் தலைமை ஏனோ நடத்தவில்லை. இந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுக்குழு நடைபெறவுள்ளதால் அதிமுகவில் பரபரப்பு பற்றிக்கொண்டது.












Click it and Unblock the Notifications