அனலைக் கிளப்பும் ஓபிஎஸ்.. பாஜக கூட்டணியை விட்டு வெளியேற முடிவா? இன்று முக்கிய ஆலோசனை!
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். பாஜக கூட்டணியில் இருந்து அவர் வெளியேறும் முடிவை எடுப்பாரா என்பது இன்று தெரியவரும்.
2021 சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து ஈபிஎஸ் நீக்கினார். இதையடுத்து பல கட்டங்களாக சட்டப் போராட்டம் நடத்தி வந்தார் ஓபிஎஸ். எனினும், கட்சி எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் சென்றது. ஓபிஎஸ் தற்போது ''அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு'' என்ற பெயரில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஓபிஎஸ், ராமநாதபுரம் தொகுதியில் களம் கண்டார். அதிக வாக்குகளைப் பெற்றாலும் தோல்வியே கிட்டியது. இச்சூழலில்தான் கடந்த முறை பிரதமர் தமிழகம் வந்த போது அவரை சந்திக்க நேரம் கேட்டும் ஒதுக்கப்படவில்லை. அதன் பின்னர் அதிமுக - பாஜக கூட்டணி உருவானது.
அந்த சமயத்திலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருந்தார். அப்போதும் அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அது தனக்கு வருத்தம் என்று ஓபிஎஸ் பதிவு செய்திருந்தார். பாஜக அணியில் ஓபிஎஸ் அணி இருக்கிறதா என்ற கேள்விக்கு விடையே இல்லாமல் இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான் அண்மையில் தூத்துக்குடிக்கு வந்த பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததாகவும், இதனாலேயே பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்ஸுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கூட்டணியில் இருந்து விலகவேண்டும் என ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் ஓபிஎஸ் அதற்குள் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற கேள்வி இருந்து வருகிறது. ஓபிஎஸ்ஸின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக இருக்கக் கூடிய பண்ருட்டி ராமச்சந்திரன், பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமக்ரா சிக்ஷா திட்ட நிதி 2151 கோடி ரூபாயை அரசியல் காரணத்துக்காக தர மறுப்பது கண்டனத்துக்குரியது என்றும் அந்த நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ஓபிஎஸ் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். மத்திய அரசை கண்டித்து ஓபிஎஸ் முதல் முறையாக அறிக்கை விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார். சென்னையில் இன்று ஆதரவாளர்களுடன் அவர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதால், அது தொடர்பாகவும் இன்று கலந்து ஆலோசிக்க உள்ளார். ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட நகர்வு தமிழக அரசியல் களத்தில் அனலைக் கிளப்புமா? என்பது போகப் போகத் தெரியும்.












Click it and Unblock the Notifications