"அன்பு சகோதரர்".. கசப்புகளை தூக்கி எறிந்துவிட்டு வாருங்கள்.. இபிஎஸ்ஸுக்கு ஓபிஎஸ் அழைப்பு
சென்னை: கசப்புகளை தூக்கி எறிந்துவிட்டு அதிமுகவில் ஒற்றுமையாக பணியாற்ற வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த பேட்டியில் பல இடங்களில் அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி என்றே ஓபிஎஸ் அழைத்தார்.
Recommended Video
ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதரவு பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. ஜூலை 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. அதாவது இது எடப்பாடி தரப்புக்கு பின்னடைவையும் ஓபிஎஸ் தரப்புக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

மகிழ்ச்சி
இந்த நிலையில் இதே மகிழ்ச்சியுடன் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், குன்னம் ராமசந்திரன், எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்ஸிடம் கட்சி இனி எப்படி செயல்பட போகிறது என கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழக மக்கள் அரவணைப்பு
அதற்கு தொண்டர்களின் ஆதரவோடும் தமிழக மக்களின் அரவணைப்போடும் நாங்கள் தொடர்ந்து நடத்துவோம் என்றார். எடப்பாடியோடு சேர்ந்து பணியாற்ற தயாரா என்ற கேள்விக்கு ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னர் யார் எல்லாம் கட்சியில் பொறுப்பில் இருந்தார்களோ அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற தயார் என்றார்.

அதிமுக
அது போல் இனி அவர் தரப்பு, இவர் தரப்பு என்றெல்லாம் இல்லை ஒருங்கிணைந்த அதிமுகதான் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அதிமுக எம்ஜிஆரால் தொண்டர்களுக்கான இயக்கமாக உருவாக்கப்பட்டது.

எம்ஜிஆர்
எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை அவருக்கு தோல்வியே இல்லை. எதிர்க்கட்சியின் சதி வேலைகளை முறியடித்தவர் ஜெயலலிதா. 30 ஆண்டுகாலம் அதிமுகவை ஜெயலலிதா கட்டி காத்தார். ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் பயணித்தால் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது என்பதை பல தருணங்கள் நிரூபணம் ஆகியுள்ளது.

கருத்து வேறுபாடுகள்
எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் அசாதாரண சூழல் ஏற்பட்டது- நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். கடந்தவை கடந்தவைகளாக இருக்கட்டும். அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட விரும்புகிறார்கள்.

வேற்றுமைகள்
அதிமுகவில் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட வேண்டும். அதிமுக ஒன்றுபடுவதே அனைவரது விருப்பமாக இருக்கிறது. அன்பு சகோதரர் நானும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து சிறப்பாக செயல்பட்டோம். இரட்டை தலைமை என்பதில் பிரச்சினையில்லை, கூட்டுத் தலைமையாக செயல்படுவோம் என ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார்.












Click it and Unblock the Notifications