பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்.. கடிதம் அனுப்பிய அடுத்த நாளே அனுமதி.. உற்று கவனிக்கும் அதிமுக!
சென்னை: தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. நேற்று பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டு கடிதம் எழுதி இருந்த நிலையில், இன்று நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாகத் தமிழ்நாடு வருகிறார். நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடி தூத்துக்குடி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளை தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடி மதிப்பிலான சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்ட புதிய முனையத்தில் மோடி திறந்து வைக்க உள்ளார்.

அதேபோல் மதுரை - போடி இடையிலான மின்மய ரயில் வழித்தடம், தூத்துக்குடி துறைமுக ஆறு வழிச்சாலை, கூடங்குளம் அணுமின் நிலைய மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்களை மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டு கடிதம் அனுப்பினார்.
அந்தக் கடிதத்தில், எனது தொகுதியுடன் தொடர்புடைய மதுரை - மோடி இடையிலான ரயில் பாதையின் மின்மயமாக்கல் உட்பட பல முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைக்க தூத்துக்குடி வருகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதி கிடைத்தால் அது எனக்கு மரியாதை மற்றும் பாக்கியமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்ட நாளில் இருந்தே பாஜகவினரால் ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டு வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ் இருப்பதாக கூறிக் கொண்டாலும், அதிமுக தரப்பில் இதுவரை யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதனிடையே மதுரை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ் தரப்பு முயற்சித்தும் நேரம் ஒதுக்கப்படவில்லை.
இதனை அமித்ஷா தங்களைச் சந்திக்காமல் சென்றது வருத்தம் என்றும் ஓபிஎஸ் கூறி இருந்தார். ராமநாதபுரம், தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓபிஎஸ் தரப்புக்கு இன்னும் கணிசமான ஆதரவு இருந்து வருகிறது. இதனால் பாஜக கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என்பதில் ஓபிஎஸ் தீவிரமாக இருக்கிறார்.
இந்த நிலையில் தூத்துக்குடி வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஓ பன்னீர்செல்வத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திக்கும் பட்சத்தில், அது தமிழக அரசியலில் திருப்புமுனையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே செப்.4ல் மதுரையில் ஓபிஎஸ் தரப்பில் மாநாடு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்குப் பின் ஓபிஎஸ் தரப்பை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முதற்கட்டமாக பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், இன்னும் சில மாதங்களில் ஓபிஎஸ் பாதை எந்தப் பக்கம் என்பது முடிவாகிவிடும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications