"ஒதுங்கி கொள்வார்கள்" ஓபிஎஸ், சசிகலா தனியாக செல்ல மாட்டார்கள்.. நம்பிக்கையாக சொன்ன டிடிவி தினகரன்!
சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பாதகம் வராத அளவிற்கு ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவரும் நடந்து கொள்வார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் தனிப் பாதையில் செல்ல மாட்டார்கள் என்று கூறிய டிடிவி தினகரன், என்டிஏ கூட்டணிக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் சூசகமாக கூறியுள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலில் தவெக பக்கம் டிடிவி தினகரன் செல்வார் என்று கருதப்பட்ட சூழலில், திடீரென யூடர்ன் போட்டு மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைந்துவிட்டார். செப்டம்பர் முதல் வாரத்தில் என்டிஏ கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகிய போதே, அமித்ஷாவிடம் இருந்து அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தை முடிவில் கூட்டணியில் இணைந்ததாக கூறியுள்ளார்.

என்டிஏவில் டிடிவி தினகரன்
டிடிவி தினகரனின் இந்த செயல் தவெக மட்டுமல்லாமல் ஓபிஎஸ் தரப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன்பின் ஓபிஎஸ் தரப்பும் அதிமுகவுடன் இணைய தயாரான போது, எடப்பாடி பழனிசாமி கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டது என்று பதிலடி கொடுத்தார். இதன்பின் தேனியில் இருந்த ஏராளமான ஓபிஎஸ் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமாகினர்.
ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன?
இதனால் ஓபிஎஸ் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே திமுக தரப்பில் ஓபிஎஸ் உடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திமுகவுடன் கைகோர்க்க ஓபிஎஸ் தயக்கம் காட்டி வருகிறார். அதேபோல் புதியக் கட்சியான விஜய்யுடன் கைகோர்க்கவும் ஓபிஎஸ் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.
சசிகலாவின் வியூகம்
இதனால் ஓபிஎஸ் தனித்துவிடப்பட்டதாக பார்க்கப்படுகிறது. இதனால் என்டிஏ கூட்டணி அல்லாமல் ஓபிஎஸ் எந்த கூட்டணியில் இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் சசிகலாவும் இந்த தேர்தலில் தனது ஆதரவாளர்களை களமிறக்கப் போவதாக கூறி இருக்கிறார். தனிக் கட்சி தொடங்குவதும் குறித்தும் ஆலோசித்து வருகிறார்.
டிடிவி தினகரன் பேட்டி
இந்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா குறித்து டிடிவி தினகரன் பேசுகையில், ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவரும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பாதகம் ஏற்படுத்தாதவாறு நடந்து கொள்வார்கள். அவர்கள் ஜெயலலிதாவின் விசுவாசிகள். அதனால் திமுக ஆட்சிக்கு வருவதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். அவர்களாக ஒதுங்கி கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் ஆதரவை அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications