வாரம் ஒரு முறை கட்சி அலுவலகம்... நிர்வாகிகள் சந்திப்பு... ஓ.பி.எஸ். முன்னெடுக்கும் புதிய முயற்சி...!
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வாரம் ஒருமுறை விஜயம் செய்வது என முடிவெடுத்திருக்கிறார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
நிர்வாகிகளுக்கும் தனக்கும் இடையே ஆழமான பிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் இந்த புதிய முயற்சியை முன்னெடுக்க உள்ளார்.
தொண்டர்களின் குறைகள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுத்து கட்சியில் தனக்கான இருப்பை வலிமையாக கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறார் ஓ.பி.எஸ்.

தொண்டர்கள் பலம்
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவில் இருந்த மதிப்பும், மரியாதையும் தனி ரகம். அவரது அறிமுகத்துக்காகவும், ஆதரவுக்காகவும் அவர் வீட்டு முன் குவிந்த நிர்வாகிகள் ஏராளம். ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்ததால் அதிகாரிகள் மட்டத்திலும் ஓ.பி.எஸ்.க்கு பெரும் செல்வாக்கு நிலவி வந்தது.

சரிந்த இமேஜ்
இப்படி அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருந்த பெரிய பிம்பத்தை தகர்த்தது வேறு யாருமல்ல, அவரே அவரது பிம்பத்தை கடந்த 2017-ம் ஆண்டு உடைத்துக்கொண்டார். தர்மயுத்தம் நடத்திய அவர் பின்னால் பெருமளவில் எம்.எல்.ஏ.க்கள் அணி வகுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பேரை தவிர யாரும் செல்லவில்லை. அப்போதே அவரது செல்வாக்கு சரிவதை உணர முடிந்தது. இதனிடையே சுதாரித்துக்கொண்ட அவர் ஒரு வழியாக சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற அந்தஸ்துடன் ஐக்கியமானார்.

வழிகாட்டுதல் குழு
அப்படி ஐக்கியமான அவர் இதுவரை அந்தப் பதவிக்குரிய வகையில் செயல்பட்டு தனக்கானஆதரவாளர்கள் வட்டத்தை தக்கவைக்க தவறியதன் விளைவாக, ஒரு வழிகாட்டுதல் குழு அமைக்கக் கூட மூச்சு முட்ட போராட வேண்டிய சூழல் உருவானது. 2017-ம் ஆண்டு தர்மயுத்தத்தின் போது தன் பக்கம் நின்ற நிர்வாகிகளில் பெரும்பாலானோர் இப்போது தன்னுடன் இல்லை என்பதை ஓ.பி.எஸ். உணரத் தொடங்கியுள்ளார்.

ஓபிஎஸ் நம்பிக்கை
இந்நிலையில், வாரம் ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்கும் எண்ணத்தில் இருக்கிறார் அவர். கடந்த அக்டோபர் 17-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி வைத்த பின்னர் கூட இது குறித்து பேசியிருக்கிறார். இதன் மூலம் இழந்த செல்வாக்கை கட்சியினர் மத்தியில் மீட்டெடுக்க முடியும் என்பது அவரது நம்பிக்கை.












Click it and Unblock the Notifications