“எடப்பாடிக்கு நல்ல மனசு”.. காட்டமான ரிப்ளை பற்றி ஓ.பன்னீர்செல்வம் சொன்ன விஷயம்!
சென்னை: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பேசி வரும் நிலையில், "ஓநாயும், வெள்ளாடும் ஒன்று சேர முடியுமா?" என்று குறிப்பிட்டு இன்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல மனசு என ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? என ஈபிஎஸ் கேள்வி எழுப்புகிறார். எடப்பாடி பழனிசாமியின் வார்த்தை ஜாலம் நடைமுறைக்கு ஒத்து வராது. அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது மக்களாலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அறிக்கை விட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல மனசுதான். அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது அதிமுக அடிமட்ட தொண்டர்கள் வரை உள்ள கருத்து. அதிமுக தொண்டர்கள் விஜய் கட்சிக்கு செல்வார்கள் என மருது அழகுராஜ் கூறுகிறார். உண்மையில் தூய அதிமுக தொண்டர்கள் யாரும் எந்த கட்சிக்கும் செல்ல மாட்டார்கள் என்பது தான் அதிமுக தொண்டர்களின் வரலாறு.
விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. தேர்தலில் நின்று மக்கள் செல்வாக்கை பெற்றால் தான் அவர் குறித்து கருத்து சொல்ல முடியும். திராவிட இயக்க வரலாறு இரு மொழி கொள்கைதான் என்பதை சட்டமன்ற தீர்மானம் மூலம் பல முறை தெளிவுபடுத்தி இருக்கிறோம். தேர்தலுக்கு ஓர் ஆண்டு உள்ளதால் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து இப்போது முடிவு செய்ய முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணையத் தயார் என்று அறிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், திடீரென ஓபிஎஸ் இப்படி அறிவித்தது விவாதங்களைக் கிளப்பிவிட்டது.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளையொட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில், "பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன.
ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா ? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா ? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது. அதிமுக தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம்." எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications