“லா பாயிண்டை” பிடித்த ஓபிஎஸ்.. எம்ஜிஆர் சொன்னாரே! ரிசல்டுக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க உதவிய வாதம்
"ஒருவருக்காக மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது. தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பையும் ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது."
சென்னை: அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடத்த அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆனால் நீதிமன்ற உத்தரவு வரும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என தீர்ப்பளித்து இருப்பது எடப்பாடி தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், இந்த உத்தரவுக்கு காரணமான ஓபிஎஸ் தரப்பு வாதத்தை பார்ப்போம்.
அதிமுக பொதுச்செயளாளருக்கு தேர்தல் வாக்குப்பதிவு 26 ஆம் தேதி நடத்தப்பட்டு 27 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அக்கட்சித் தலைமை அறிவிப்பு வெளிட்டது.
இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

நீதிமன்ற நடவடிக்கை மீறல்
அவர்கள் தாக்குதல் செய்த மனுக்களில் தெரிவித்து இருப்பதாவது, "பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிவிட்டு, சட்டவிரோதமாக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கையை மீறும் செயல் இது. அது மட்டுமல்லாமல், நீதிமன்ற கண்ணியத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் செயல்.

அதிகாரமே இல்லை
கட்சி விதிகளை திருத்த பொதுக்குழுவிற்கு அதிகாரம் இருந்தாலும், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஜெயலலிதா மரணத்திற்கு பின் 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் ஜெயலலிதாவை கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என அறிவிக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர் பதவி
பொதுச்செயலாளர் பதவியை கலைத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதாகவும், திருத்தப்பட்ட இந்த விதியின்படி ஒன்றரை கோடி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பதவிக் காலம் 2026 வரை உள்ளது.

அவசரமாக அறிவிப்பு
பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, எந்த காரணமும் இன்றி பொதுச்செயலாளர் பதவிக்கு அவசரமாக தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளனர். வார இறுதி நாட்களில் வேட்புமனுத்தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியிட்டதன் மூலம், போட்டியிட விரும்புவோரை சட்டவிரோதமாக தடுத்துள்ளனர்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

நீதிமன்றத்தில் வாதம்
இந்த வழக்கு இன்று நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் இன்று விசாரணைக்கு வந்தபோது ஆஜரான ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தரப்பு வழக்கறிஞர், "தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை பொறுமையாக விசாரிப்பதில் எங்களுக்கு பாதகம் இல்லை. தேர்தலை எதிர்த்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்.

ஒருவருக்காக தேர்தல்
ஒருவருக்காக மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது. தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பையும் ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என 2017 ல் அறிவித்து விட்டு, கட்சி கொள்கைக்கு எதிராக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் சொன்னது
உச்சநீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்த போது தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை மட்டுமே ஏற்றுக் கொண்டது. தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை ஏற்கவில்லை. அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர், சாதாரண தொண்டனும் கட்சித் தலைமைக்கு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

70 மாவட்ட செயலாளர்கள்
அதிமுகவில் மொத்தமாக 70 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில், வேட்பாளர்களுக்கு 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தர வேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது. 7 உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும், கட்சி விதிகளுக்கு எதிராக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1 கோடியே 55 லட்சம் பேர் அடிப்படை உறுப்பினர்களாக உள்ளனர். அதில், 327 முதன்மை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது சட்டவிரோதமானது.

நோட்டீஸ் வழங்கவில்லை.
தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும். கட்சி விதிகளின் படி 7 நாட்கள் நோட்டீஸ் வழங்காமல் கடந்த 17 ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதனை எப்படி பொதுவானதாக கருத முடியும். வழக்கு நிலுவையில் இருக்கும் போது தேர்தல் அறிவிக்கப்பட்டது சட்ட விரோதம்.

நிலுவையில் இருக்கும் வழக்கு
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது எப்படி பொதுச்செயலாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியிட முடியும். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் 2026 வரை பதவியில் தொடரலாம்." என வாதம் முன் வைத்தனர்.












Click it and Unblock the Notifications