ஆடு பகை குட்டி உறவு; டீப் டிஸ்கஸன் நடத்திய வாரிசுகள்; ஆன்மிகச் செம்மல் அரசியல் பிரவேசம்?
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப்பும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனும் சென்னையில் சந்தித்து பேசிய நிகழ்வு அதிமுக உள்வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஆன்மிகப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஜெயபிரதீப், திடீரென அரசியல் ரூட்டில் பயணிக்கத் தொடங்கியிருப்பது ஏன் என விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது.
கடந்த 15 நாட்களுக்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வமும், ஜெயக்குமாரும் பேட்டிகள் வாயிலாக மோதிக்கொண்ட சூழலில், அவர்களின் வாரிசுகள் நடத்தியுள்ள சந்திப்புகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
'இந்த இக்கட்டான நேரத்தில் நீங்க இதை செஞ்சே ஆகணும்'.. இளைஞர்களுக்கு ராமதாஸ் திடீர் வேண்டுகோள்!
ஓ.பி.எஸ்.மகன்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் ஆன்மிகப் பணிகளில் அதிகம் கவனம் செலுத்தக் கூடியவர். கோயில் திருவிழா, கும்பாபிஷேகம் என சொந்த நிதியை வாரி வழங்கக்கூடியவர். ஆரம்பத்தில் இவருக்கு அரசியல் ஆசை இருந்தாலும் கூட, அதற்கு அணை போட்டு வைத்துவிட்டார் ஓ.பி.எஸ். ஏற்கனவே மூத்த மகன் ரவீந்தரநாத் எம்.பி.யாக உள்ள நிலையில் இளையமகன் ஜெயபிரதீப்பையும் அரசியலுக்குள் கொண்டு வந்து சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை ஓ.பி.எஸ்.
பேட்டிகள்
இந்நிலையில் சசிகலா இணைப்பு தொடர்பாக மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்த அடுத்த 2 மணி நேரத்தில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓ.பி.எஸ்.சை சூசகமாக தாக்ககூடிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதையடுத்து ஜெயக்குமார் தனக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை என மூத்த நிர்வாகிகளிடம் ஓ.பி.எஸ் சீறியதோடு தனது தம்பி ஓ.ராஜாவை தினகரன் இல்ல மணவிழாவுக்கும் அனுப்பி வைத்திருந்தார்.
வாரிசுகள் சந்திப்பு
இந்தச்சூழலில் 4 நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகனும் முன்னாள் எம்.பியுமான ஜெயவர்தனை ஓ.பி.எஸ்.மகன் ஜெயபிரதீப் சென்னையில் சந்தித்து பேசியிருக்கிறார். மேலும், ஒன்றாக அவருடன் பயணித்து 117 வது வட்டத்தில் மழைவெள்ள நிவாரண உதவிகளையும் ஓ.பி.எஸ்.மகன் வழங்கியிருக்கிறார். இந்த நிகழ்வை அதிமுகவினர் சற்று ஆச்சரியத்தோடு பார்ப்பதோடு ஆடு பகை குட்டி உறவோ என்ற கமெண்ட் அடிப்பதையும் அறிய முடிகிறது.
ஆன்மிகச் செம்மல்
ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப்பை அவரது ஆதரவாளர்கள் ஆன்மிகச் செம்மல் என்று தான் அழைப்பார்கள். இந்த ஆன்மிகச்செம்மல் அரசியல் செம்மலாக மாற முயற்சிக்கிறாரோ என்ற விவரம் கிடைக்கப்பெறவில்லை. அதிமுக பொதுக்குழு விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அக்கட்சியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.