“டுவிஸ்ட்”.. சபரீசன் - பன்னீர்செல்வம் சந்திப்பு! பின்னணி இதுதானா? ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ஆதங்கம்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடன் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது சந்தித்து பேசியது விவாதப் பொருளாகி இருக்கும் நிலையில், அது குறித்து ட்விட்டரில் விளக்கமளித்து உள்ளார்.
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்றது. இதனை காண தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வருகை தந்திருந்தார். அப்போது அந்த போட்டியை பார்க்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் ஓபிஎஸும் சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகின.

இதுகுறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் ட்விட்டரில் விரிவான விளக்கத்தை அளித்து இருக்கிறார். அதில் அவர் தெரிவித்து உள்ளதாவது, "கலியுகத்தில் எதார்த்தமாக உண்மையாக நடந்து கொள்பவர்கள் மற்றும் நியாயமான கருத்துக்களைத் தெரிவிப்பவர்களை ஒரு சிலர் ஏற்றுக்கொள்ள கூடிய மனப்பக்குவம் இல்லாததால் விமர்சனங்களை முன்வைத்து விரோதியாக பார்ப்பார்கள்.
கால சக்கர சுழற்சியில் மாய வலைகள் அறுக்கப்பட்ட பிறகு உண்மைத் தன்மை புரிய வரும். அப்போது விமர்சனம் செய்தவர்கள் கடந்தகால செயல்களை அறிந்து வருத்தப்படுவார்கள். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்க கழக ஒருங்கிணைப்பாளர் அவர்கள் சென்றிருக்கிறார்.
அதே பாக்ஸில் இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் மருமகன் சபரிசன் அவர்கள், "நான் அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் அவர்களை நேரில் பார்த்ததில்லை; அவரை பார்த்து பேச வேண்டும்" என்று தனது விருப்பத்தை உதவியாளர் மூலம் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு கழக ஒருங்கிணைப்பாளர் அவர்களும் சபரீசன் அவர்களும் அனைவரது முன்னிலையில் கை கொடுத்து மரியாதை நிமித்தமாக ஐந்து நிமிடம் பேசிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
இந்நிகழ்வு குறித்து கட்சியில் ஒரு சில சுயநல கூட்டத்தின் தூண்டுதலால் கழக ஒருங்கிணைப்பாளர் அவர்கள் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று விஷமத்தனமான விமர்சனங்களை உருவாக்கி வருகிறார்கள். அதைப்போல, திமுக கட்சியில் சபரீசன் அவர்களை எதிர்த்து, "அவர் அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் அவர்களை ஏன் சந்தித்தார் " என்று ஏதேனும் விமர்சனம் வருகிறதா? அது ஏன் என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நமது கழகத்தில் ஒரு சுயநல கூட்டம் நமது கட்சியை அபகரிப்பதற்காகவும் தனது செல்வாக்கை உயர்த்துவதற்காகவும் யாரெல்லாம் கட்சியில் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்களோ அவர்களின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்ற சூழ்ச்சியில் இது போன்ற விஷத்தன்மையான கருத்துக்களை கட்சிக்குள் செலுத்தி, ஒரு சில தொண்டர்களை விஷமாக்கி வைத்திருக்கிறார்கள்.
திமுக கட்சி தலைவர்களை கழக ஒருங்கிணைப்பாளர் அவர்கள் பார்த்தார், சிரித்தார், பேசினார் என்று உப்பு சப்பு இல்லாத காரணங்களை பேசி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி ஒரு சில தொண்டர்களை ஏமாற்றியும் தமிழக மக்களை குழப்பியும் வருகிறார்கள். கழக ஒருங்கிணைப்பாளர் அவர்கள் 46 ஆண்டு காலம் நமது கட்சியின் விசுவாசம் மிக்க உண்மை தொண்டனாக இருந்தார் என்று புரட்சித்தலைவியால் புகழப் பெற்று தமிழக மக்களால் உண்மையானவர் என்று பெயர் வாங்கியவர்.

தான் சார்ந்த கட்சியின் வளர்ச்சிக்காக கடந்து வந்த பாதைகளில் எவ்வளவு முட்களையும் கற்களையும் கடந்து, வலிகளை சுமந்து கட்சியை வளர்த்திருக்கிறார் என்று மனசாட்சியின் படி சுய அறிவோடு சிந்தித்துப் பார்த்து, விமர்சனங்களை முன் வையுங்கள்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications