ஓபிஎஸ் கூடவே இருந்து, அவருக்கே தெரியாம ரகசிய மீட்டிங்.. "என்ன சதி?" - முனுசாமிக்கு சரமாரி கேள்வி!
சென்னை : தர்மயுத்தத்திற்கு பிறகு ஓ.பி.எஸ்க்கு தெரியாமல் அப்போது அமைச்சர்களாக இருந்த தங்கமணி, வேலுமணி ஆகியோருடன், இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி ஓ.பி.எஸ்க்கு எதிராக என்ன சதித் திட்டம் தீட்டினீர்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கே.பி.முனுசாமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக துணை பொதுச் செயலாளரான கே.பி.முனுசாமி முன்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் முதல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார் கேபி முனுசாமி. இதனால், கேபி முனுசாமியை ஓபிஎஸ் தரப்பினர் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, கேபி முனுசாமிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஆப்டிகல் இல்யூஷன்: படத்தில் மறைந்திருக்கும் நாய்.. உங்க கண்களுக்கு தெரிகிறதா? கண்டுபிடிச்சா கிரேட்!
கேபி முனுசாமி காட்டம்
சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் கே.பி.முனுசாமி ஈபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் பரவின. இதனை மறுத்த கேபி முனுசாமி, ஓ.பன்னீர்செல்வம் எந்த தியாகமும் செய்யாமல் பல பதவிகளை அடைந்தவர். ஓ.பன்னீர்செல்வம் ஒற்றை தலைமை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் செல்கிறார். அ.தி.மு.க அலுவலகத்தை சூறையாடுகிறார். தற்போது கட்சி இணைப்பை பற்றி அவர் பேசினாலும், அதை கேட்பதற்கு அ.தி.மு.க.வினர் தயாராக இல்லை என விமர்சித்தார்.
ஓபிஎஸ் ஆதரவாளர் சரமாரி கேள்வி
இந்நிலையில், சென்னை கொளத்தூரில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், கடந்த 2 நாட்களாக கே.பி.முனுசாமி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் அதிகமாக பேசி வருகிறார்கள். கே.பி.முனுசாமி இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எனக்கு பதில் சொல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.
6 வருசம் - ஆறே மாசம்
6 ஆண்டு பதவிகாலம் கொண்ட ராஜ்யசபா உறுப்பினர் பதவியை உங்கள் சுயநலத்திற்காக ஆறே மாதத்தில் ரஜினாமா செய்தீர்களே.. அது நியாயமா? அந்த பதவியை ஒரு சாதாரண தொண்டனுக்கு கொடுத்திருந்தால் ஆறாண்டுகள் பதவி வகுத்திருப்பான் அல்லவா?
ஓபிஎஸ்ஸுக்கு எதிராக சதி திட்டம்
தர்மயுத்தத்திற்கு பிறகு கீழ்ப்பாக்கம் வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியாமல் அப்போது அமைச்சர்களாக இருந்த தங்கமணி, வேலுமணி ஆகியோருடன், இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி ஓ.பி.எஸ்க்கு எதிராக என்ன சதித் திட்டம் தீட்டினீர்கள். அது பற்றி வெளிப்படையாக கூற முடியுமா?
இரட்டை வேடம்
கே.பி.முனுசாமி, ஓ.பி.எஸ்ஸை நீங்கள் தான் முதலமைச்சர் ஆக வேண்டும் அண்ணா என்று சொல்லிவிட்டு பின்பு எடப்பாடி பழனிசாமியிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு, ஈபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என்று சொன்னீர்களே இந்த இரட்டை வேடத்திற்கு பெயர் என்ன?
நல்லவர் போல நடித்து
தர்மயுத்தம் நடத்திய காலத்தில், கட்சியில் அங்கீகாரம் இல்லாத நீங்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் நல்லவர் போல நடித்து துணை ஒருங்கிணைப்பாளர் பதவியைப் பெற்றுக் கொண்டு, ஓ.பி.எஸ்க்கு பல வகைகளில் நம்பிக்கை துரோகம் செய்தீர்களே.. இந்த செயலுக்கு உங்களுடைய பதில் என்ன?
இப்படியே பேசினால் - எச்சரிக்கை
நீங்கள் சொல்கிறீங்கள்.. நான் ஒரு சாதாரண தொண்டன் என்றும், பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்தேன் என்றும், இந்த துரோகத்திற்கு உங்கள் பதில் என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கு கே.பி.முனுசாமி பதில் கூற வேண்டும். அவர் தொடர்ந்து இதுபோன்று பேசிக்கொண்டே வந்தால் கிருஷ்ணகிரியில் உள்ள உங்கள் வீடு முற்றுகை இடப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.