கூலிக்கு ‘ஆள்’ பிடித்து.. உள்ளத்தில் நஞ்சு.. உதட்டில் இனிப்பு.. எடப்பாடியை சீண்டிய மருது அழகுராஜ்!
எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்து கவிதை நடையில் பதிவிட்டுள்ளார் மருது அழகுராஜ்.
சென்னை : "தான் என்ற கர்வம் இல்லை.. தடித்த வார்த்தை உதிர்த்தது இல்லை.. கூலிக்கு ஆள் பிடித்து கொக்கரித்தது இல்லை.. கட்சியை வைத்து பணத்தை திருடி அப்படி திருடிய பணத்தை கொண்டு கட்சியையே திருடிட கணக்குப் போட்டதில்லை.." என எடப்பாடி பழனிசாமியை சீண்டி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்.
அதிமுகவில் கடந்த 9 மாதங்களாகத் தொடர்ந்து வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பை அளித்த நிலையில், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு நாளை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்காக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே நடந்த போட்டியில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் இருக்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். பொதுச் செயலாளர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் ஈபிஎஸ். ஆனால், ஓபிஎஸ் அணி தொடர்ந்த வழக்கு காரணமாக, தேர்தல் முடிவுகளை அறிவிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக விவகாரம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் சூழலில் தனது பலத்தை நிரூபித்து கட்சியை முழுமையாகக் கைப்பற்ற ஆயத்தமாகி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

உள்ளத்தில் நஞ்சை வைத்து
இந்நிலையில், ஆச்சரியங்களின் தோரணம் என்ற தலைப்பில் அதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "அம்மா அடையாளம் காட்டியதை ஆதாரமாக வைத்து தனக்கென ஆட்களை திரட்டியது இல்லை.. அணி அரசியல் செய்து அபகரிப்பு நடத்திட கனவிலும் முயன்றதும் இல்லை.. முதல்வர் நாற்காலியை மூலதனமாக கொண்டு குழு மனப்பான்மை உருவாக்கி குதர்க்கம் நடத்தவில்லை.. நான் கண்ணன் குலம் என்று கடிதாசி போட்டு சாதியை துணைக்கு அழைத்தில்லை.. உள்ளத்தில் நஞ்சை வைத்துக் கொண்டு உதட்டுக்கு இனிப்பு ஊட்டிய வஞ்சகம் செய்யவில்லை..

குற்றரேகைகள் ஏதுமில்லை
பாதபூஜை செய்து பதவியை வாங்கிக் கொண்டு நன்றி மறந்து தந்தவரையே நாய் என்று பழிக்கவில்லை.. ஒற்றைத் தலைமை கற்பனை என ஊரை ஏய்த்தது இல்லை.. தொண்டனும் தலைவனாக ஆகலாம் என தூயவராய் பேசிக் கொண்டு தொண்டன் உரிமையை பறிக்கவில்லை.. குத்துக் கோல் பிடித்து கொலைகள் செய்யவிவ்லை பாதையை எழுதிக் கொடுத்து பக்குவமாய் தப்பித்து வரவில்லை.. நன்றியை மறந்து நாச்சவடால் பேசியதில்லை.. கொலை கொள்ளை குற்றங்களில் ஈடுபட்ட குற்றரேகைகள் ஏதுமில்லை.. துரோகி என்னும் பழிக்கு ஒரு போதும் ஆட்பட்டது இல்லை.. நிதியை கொண்டு நீதியை வளைத்ததில்லை.. சதிவைலை செய்வதை சாதனையாய் நினைத்தது இல்லை..

கூலிக்கு ஆள் பிடித்து
ஒப்படைத்த ஒன்றை உரியவரிடம் திருப்பி ஒப்படைக்க மறுத்ததும் இல்லை.. எந்தவொரு தேர்தலிலும் இதுவரை தோல்வியை கண்டதில்லை.. உப்பிட்ட இயக்கத்தை உயிராக நினைப்பதில் சாணளவும் சறுக்கியது இல்லை.. தான் என்ற கர்வம் இல்லை தடித்த வார்த்தை உதிர்த்தது இல்லை.. கூலிக்கு ஆள் பிடித்து கொக்கரித்தது இல்லை.. கட்சிக்கு சம்பந்தமில்லா வாடகை வாய்களை அமர்த்தி கதாகலாட்சேபம் நடத்தியது இல்லை.. கட்சியை வைத்து பணத்தை திருடி அப்படி திருடிய பணத்தை கொண்டு கட்சியையே திருடிட கணக்குப் போட்டதில்லை.. ஆம் அம்மாவே எங்கள் உலகம் அவர்காட்டிய அடையாளம் ஓ.பி.எஸ்ஸே எங்கள் கழகம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications