எகிறிய மவுசு.. ஓபிஎஸ்ஸை தேடிய மோடி! மேட்டர் எடப்பாடிக்கு தெரியும்! போட்டுத்தாக்கும் புகழேந்தி!
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்துக்கு, குஜராத்தில் கிடைத்த மரியாதை, பாஜகவின் விருப்பம் என்ன என்பதை எடப்பாடி பழனிசாமிக்கும் உணர்த்திவிட்டது, அதனால் தான் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது பற்றி ஈபிஎஸ் அணியினர் பேசி வருகிறார்கள் என ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
பாஜகவை அடுத்தடுத்து 3 முறை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துள்ளார், காங்கிரஸ் கட்சிக்குக் கதவு திறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என சி.வி.சண்முகத்தின் பேச்சு வழியாக பாஜகவுக்கு எடப்பாடி தெரியப்படுத்தியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி.
போக்கு காட்டி பாஜகவைப் பணிய வைக்கலாம் என்பது எடப்பாடி பழனிசாமியின் திட்டம், பாஜகவிடம் இவர்கள் எண்ணம் பலிக்காது எனக் கூறியுள்ளார் புகழேந்தி.

அதிமுக + பாஜக கூட்டணி
2019 நாடாளுமன்ற தேர்தலில், பாஜக, அதிமுக கூட்டணி அமைத்துக் களமிறங்கின. இந்த கூட்டணி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி பொறுப்பேற்றது. அதிமுக 66 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் வென்றது. அதன்பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜக தனித்து போட்டியிட்டன.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக தொடர்வதாக அறிவித்திருந்தாலும், அதிமுக - பாஜக இடையே அரசியல் களத்தில் மெல்லிய பூசல்கள், வெடிப்பதும், அணைவதுமாக இருந்தது. இதற்கிடையே, அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதில், பெரும்பான்மையான நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் ஈபிஎஸ் பக்கம் நிற்க, ஓ.பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டார். இதில், பாஜக தலைமை, ஓபிஎஸ் பக்கமே நிற்பதாகத் தெரிகிறது. ஓபிஎஸ்ஸுடன் இணைந்து செயல்பட வேண்டும் என ஈபிஎஸ்ஸுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

3 முறை புறக்கணித்த எடப்பாடி
அமித்ஷா சென்னை வந்த போது அவரை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. ஓபிஎஸ் மட்டும் சந்தித்து கைகுலுக்கினார். காசி தமிழ் சங்கமம் விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் ஈபிஎஸ் புறக்கணித்தார். குஜராத்தில் நடந்த பாஜக முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு வந்தும் ஈபிஎஸ் செல்லவில்லை. அடுத்தடுத்து, மூன்று நிகழ்வுகளில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. இதற்கிடையே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயருடன் சந்த அழைப்பிதழை ஏற்று ஜி-20 ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

திமுக + பாஜக
அதிமுக எம்.பியும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், நாடாளுமன்ற தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி அமையப்போகிறது, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக கூட்டணியில் இருந்து கழற்றி விடப்போகிறது. திமுகவிடம் ஒன்று எங்களுடன் கூட்டணி வையுங்கள் அல்லது காங்கிரஸை கழற்றி விடுங்கள் என்று பாஜக கூறுகிறது, திமுகவும் அதற்கு தயாராகிவிட்டது எனப் பேசினார். சிவி சண்முகத்தின் இந்தப் பேச்சை பாஜக சற்றும் ரசிக்கவில்லை.

3ம் கட்ட தலைவர்
சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எந்தக் கட்சி, எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கும் என்று அந்தந்த கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் பேசினார்கள் என்றால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. யாரோ சில மூன்றாம் கட்ட தலைவர்கள், பாஜகவும் திமுகவும் கூட்டணி என்று பேசுகிறார்கள் என்றால் அவர்கள் பாஜகவில் சேர்ந்திருக்க வேண்டும் அல்லது திமுகவில் சேர்ந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் நான் பதில் சொல்கிறேன் எனத் தெரிவித்தார்.

எடப்பாடி ரெடி ஆகிட்டாரா?
சிவி சண்முகத்தின் பேச்சை அடுத்து, பாஜக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடப்பாடி பழனிசாமி எட்டிவிட்டார் என அரசியல் அரங்கில் பேச்சுகள் கிளம்பி உள்ளன. பாஜக கூட்டணியில் இருந்து விலகி, பாமக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து மெகா கூட்டணியை அமைக்க ஈபிஎஸ் தயாராகி விட்டார், அதன் காரணமாகவே, எடப்பாடி தரப்பில் இருந்து பாஜகவை விமர்சிக்கும் பேச்சுகள் எழுந்திருக்கின்றன என்கிறார்கள். இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி இது பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

பாஜகவுக்கு பெப்பே
புகழேந்தி கூறுகையில், சி.வி.சண்முகம் பேசியதை உற்றுக் கவனித்தால் பல உண்மைகள் புரியவரும். சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி எங்கள் கட்சியின் கொள்கை வேறு, பாஜகவின் கொள்கை வேறு, நாங்கள் வேறு, அவர்கள் வேறு, அவர்கள் வரும்போதெல்லாம் போய் பார்க்க அவசியமில்லை என்று பஞ்ச் டயலாக் எல்லாம் பேசினார். இவர்களின் நடவடிக்கையைத் தொடர்ந்து கவனித்தால் பாஜகவுக்கு பெப்பே காட்டுவதைப் போல் உள்ளது.

ஓபிஎஸ் எங்கே?
அதை உறுதிசெய்யும் சம்பவங்களும் குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் நடைபெற்றது. குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு வந்ததால் அவர் கலந்துகொண்டார். ஆனால், எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றே அங்கே செல்லவில்லை. நீங்கள் என்ன அழைப்பது? நான் என்ன வருவது? என்ற தொனியில் அவரின் செயல்பாடு இருந்தது. குஜராத்தில் தமிழக தலைவர்களைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்த மோடி, அவ்வளவு பேர் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் Where is OPS? என்று கேட்டுள்ளார்.

எடப்பாடிக்கு தெரிந்துவிட்டது
அங்கே நின்ற ஏ.சி.சண்முகம் தொலைவில் நின்ற ஓ.பன்னீர்செல்வத்தைக் கூப்பிட்டுள்ளார். ஆக, மரியாதை அங்கு யாருக்குக் கிடைத்தது, கொடுக்க விரும்புகிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறது. இது எடப்பாடி பழனிசாமி அணிக்கும் தெரிந்துவிட்டது. சி.வி.சண்முகத்தின் பேச்சு என்பது, நாங்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்குத் தயாராக இருக்கிறோம் என்பதைச் சொல்லியிருக்கிறார்.

எடப்பாடி முயற்சி பலிக்காது
ஈபிஎஸ் ஆதரவு இல்லாமல் சண்முகம் இப்படிப் பேசுவாரா என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பாஜக தரப்பிலிருந்து இன்னும் கடுமையான எதிர்ப்பை அண்ணாமலை தெரிவித்திருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குக் கதவு திறக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை சி.வி.சண்முகத்தின் பேச்சு வழியாக பாஜகவுக்கு எடப்பாடி அணி உணர்த்தியுள்ளது. ஒருபக்கம் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று கூறிக்கொண்டே, மறுபக்கம் கூட்டணியை முறிக்கும் வகையில் பேச்சு எனப் போக்கு காட்டி பாஜகவைப் பணிய வைக்கலாம் என்பது அவர்களின் திட்டம், பாஜகவிடம் இவர்கள் எண்ணம் பலிக்காது எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications