ஓபிஎஸ் முன்னாடியே நத்தம் விஸ்வநாதனை அடிக்கப் பாய்ந்த வைத்தியலிங்கம்! ’மாஜி’ வெளியிட்ட ஷாக் தகவல்!
சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமை பேச்சுவார்த்தையின்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் அடிக்க முயன்றதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவைப் பொருத்தவரை மிக முக்கிய தலைவர்களாக பார்க்கப்படும் சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவாக உள்ளனர்.
இதில் கடந்த பல ஆண்டுகளாகவே எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக நாமக்கல் தங்கமணி இருக்கிறார். கடந்த இரு நாட்களாகவே அவர் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக வெளியிட்டு வரும் தகவல்கள் அதிமுக பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

நாமக்கல் தங்கமணி
ஓபிஎஸ்க்கு இணை பொதுச்செயலாளர் பதவி, ஓபி ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி என பல தகவல்களை அவர் நேற்று வெளியிட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் அடிக்கப் பாய்ந்தார் என அவர் கூறியிருக்கும் தகவல்கள் தான் தற்போது அதிமுகவில் பரபரப்பை மேலும் கிளறி இருக்கிறது.

விடிய விடிய பேச்சுவார்த்தை
நாமக்கல்லில் அதிமுக கூட்டமொன்றில் அவர் பேசியிருக்கும் பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது தொடர்பாகப் பேசியுள்ள அவர், அதிமுக சார்பில் 23 ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடியை தேர்ந்தெடுக்கலாம் என நினைத்து ஒபிஎஸ் அவர்களிடம் விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே நீதிமன்றத்திற்கு சென்று தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என தடை வாங்கி விட்டார்.

அடிக்க பாய்ந்த வைத்தியலிங்கம்
ஒபிஎஸ்ஸிடம் பல்வேறு பிரச்சினைகளுக்கு பேசும் போது வைத்திலிங்கம் அவர்கள் அதிமுக ஒற்றுமையாக இருக்க கூடாது என்பதற்காக வைத்திலிங்கம் செயல்பட்டார். ஒற்றை தலைமை வேண்டும் என பேச்சுவார்த்தை நடக்கும் போதே நெருங்கிய நண்பரான நத்தம் விஸ்வாதனை அடிக்க பாய்ந்தவர் வைத்தியலிங்கம். கட்சி ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்பது தான் அவர் எண்ணம்.

பரபரப்பு
இருந்தபோதிலும் மரியாதை குறைவாக நடந்து விடக்கூடாது என்பதற்காக ஒபிஎஸ் அவர்களுக்கு கட்சியின் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக எடப்பாடி கூறினார். ஒ பி எஸ் மகனுக்கு மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என தெரிவித்தார், அதையும் வழங்குவதாக எடப்பாடி தெரிவித்தார்" என பேசியுள்ளார் நாமக்கல்லைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான தங்கமணி. இதனால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications