செல்போனை எடுக்க முடியவில்லை.. கொலை மிரட்டல் வருகிறது.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது அதிமுக எம்எல்ஏ புகார்
சென்னை: சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக பேசியதால் அவரது ஆதரவாளர்கள் தொலைப்பேசி மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாக அதிமுக எம்எல்ஏ அரக்கோணம் ரவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நேற்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவையில் இருந்த சட்டமன்ற கட்சித் தலைவர்கள் தடைச் சட்டத்திற்கு ஆதரவாக பேசினர்.
அப்போது அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசுகையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு அதிமுக முழு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். அவரை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேச சபாநாயகர் வாய்ப்பு அளித்தார்.

ஓபிஎஸ் பேசியதற்கு எதிர்ப்பு
அப்போது ஓபிஎஸ் பேசுகையில், முதலமைச்சர் கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அதிமுக சார்பாக முழுமையாக வரவேற்பதாக தெரிவித்தார். அதிமுக சார்பாக என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக சார்பில் தளவாய்சுந்தரம் பேசிவிட்டார். மற்றொருவருக்கு வாய்ப்பு தருவது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக தெரிவித்தார்.

கடும் வாக்குவாதம்
இதற்கு சபாநாயகர் அப்பாவு தரப்பில், ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்றோ, அதிமுக உறுப்பினர் என்றோ அழைக்கவில்லை. மூத்த உறுப்பினர், முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையிலே பேச வாய்ப்பளித்ததாக விளக்கமளித்தார். இதனிடையே ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டசபையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மனோஜ் பாண்டியனுக்கும், அதிமுக எம்எல்ஏக்கள் அருண்குமார், கோவிந்தராஜ், அரக்கோணம் ரவி ஆகியோருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதிமுக எம்எல்ஏ ரவி புகார்
அப்போது மனோஜ் பாண்டியன் வேட்டியை மடித்துக் கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அதிமுக எம்எல்ஏ அரக்கோணம் ரவி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அதிமுக எம்எல்ஏ அரக்கோணம் ரவி அளித்த புகாரில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனது தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதனால் தான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.

காவல்துறை விசாரணை
தனது தொகுதி சார்ந்த மக்களின் அழைப்பைக் கூட ஏற்க முடியாத நெருக்கடியான நிலையில் உள்ளேன். இந்த விவகாரத்தில் போலீசார் முறையாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அரக்கோணம் எம்எல்ஏ ரவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications