என்னங்க இது! ஊரே ஓபிஎஸ் பத்தி பேசுது.. ஆனா "அங்க" பாருங்க டீ ஆத்திகிட்டு இருக்காங்க!
சென்னை: ஊரே அதிமுக ஒருங்கிணைப்பாளர் நாளைக்கு பொதுக்குழுவில் கலந்துக்குவாரா மாட்டாரா, எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றைத் தலைமையாக ஏற்பாரா மாட்டாரா என்பது குறித்து பேச்சாக இருக்கிறது. ஆனால் ஓபிஎஸ்ஸுக்கு சொந்தமான டீக்கடையில் என்ன செய்கிறார்கள் தெரியுமா?
தமிழகம் முதல் டெல்லி வரை அதிமுகவின் உள்கட்சி மோதல் குறித்து உற்றுநோக்கப்படுகிறது. நடக்கும் சந்தர்ப்ப சூழல்களை வைத்து பார்க்கும் போது டெல்லி தலைமை எடப்பாடி பழனிச்சாமி பக்கம்தான் என்பது அனைவரும் அறிந்ததே.
கடந்த 8 நாட்களாக ஓபிஎஸ்ஸும் சரி இபிஎஸ்ஸும் சரி தூக்கமில்லாமல் தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஏதோ சட்டசபை தேர்தலோ நாடாளுமன்றத் தேர்தலோ நடந்தது போலவே அதற்கான ரிசல்ட் நாளை வருவது போலவும் அரசியல் களம் சூடாகியுள்ளது.

உள்கட்சி பூசல்
என்னதான் இது உள்கட்சி பூசலாக இருந்தாலும் மற்ற கட்சியினரும் என்ன நடக்கிறது என வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் வருகிறார்கள். ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வாரா இல்லை புறக்கணிப்பாரா, சென்றால் அங்கு நிறைவேற்றப்படவுள்ள ஒற்றைத் தலைமை தீர்மானத்தை எதிர்ப்பு தெரிவிப்பாரா இல்லை வேறு வழியில்லாமல் இந்த முறையும் எடப்பாடி பழனிச்சாமிக்கு விட்டுக் கொடுப்பாரா உள்ளிட்ட பல கேள்விகள் அனைவர் மனதிலும் எழுகின்றன.

ஓபிஎஸ்ஸுக்கு சொந்தமான டீக்கடை
ஆனால் இது போன்ற பதற்றங்கள் ஏதும் ஓபிஎஸ்ஸுக்கு சொந்தமான டீக்கடையில் இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளத்தில் கம்பம் பிரதான சாலையில் தேவர் சிலைக்கு அருகே பெயர் பலகையே இல்லாத ஒரு கடைதான் ஓபிஎஸ்ஸின் டீக்கடை. இந்த கடை கிட்டதட்ட குட்டி அலுவலகம் போன்றதாகும்.

டீக்கடை அரசியல்
ஓபிஎஸ்ஸின் மனதில் இருப்பதை ஓரளவுக்கு இந்த டீக்கடையின் மூலம் அறிய முடியும். பொதுவாக டீக்கடையில் அரசியல் பேசுவார்கள். ஒரு அரசியல்வாதியின் டீக்கடை என்றால் அவர் தொடர்புடைய கட்சியின் அரசியல் பேசப்படும். ஆனால் இந்த முறை டீக்கடையில் அது போல் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவர்கள் பாட்டுக்கு வியாபாரத்தை செய்து வருகிறார்கள்.

விவேக் காமெடி
கடைக்கு வருவோருக்கு டீ, காபி, பூஸ்ட், போர்ன்விட்டா என்ன சார் வேண்டும் என்று கேட்டு உபசரிக்கிறார்கள். இந்த டீக்கடை குறித்து ஒன் இந்தியா சார்பில் விசாரித்த போது அங்கு எந்த ஆர்ப்பாட்டமும் பதற்றமும் இல்லாமல் இருக்கிறது என்றார்கள். இதை கேட்கும் போது விவேக் சொன்ன காமெடிதான் நினைவுக்கு வருகிறது "யாருமே இல்லாத கடைக்கு யாருக்குய்யா டீ ஆத்துறே " என்பதை போல் இவர்கள் பாட்டுக்கு டீ ஆத்திக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நாளில் கூட இதேபோல எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் டீ ஆற்றிக் கொண்டிருந்தது ஓபிஎஸ் டீ கடை என்பதையும் சேர்த்து கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications