பாஜகவிடம் ரொம்பவே ஓபிஎஸ் பணிந்து போவதற்கு இந்த 2 காரணங்கள்தான்!
சென்னை: தமிழக பாஜக தலைவராகப் போகிறாரா? என பேசும் அளவுக்கு அக்கட்சியிடம் துணை முதல்வர் ஓபிஎஸ் பணிவும் நெருக்கமும் காட்டி வருவதன் பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து டெல்லியால் முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார் ஓபிஎஸ். ஆனால் முதல்வர் பதவிக்கு சசிகலா ஆசைப்பட தர்ம யுத்தத்தை ஓபிஎஸ் நடத்தினார்.
பின்னர் சசிகலா சிறைக்குப் போக ஓபிஎஸ் - எடப்பாடி அணிகளை ஒருங்கிணைத்ததும் டெல்லிதான். துணை முதல்வரான ஓபிஎஸ், பிரதமர் மோடியால்தான் தாங்கள் இணைந்தோம் என்று பகிரங்கமாகவே பேட்டி அளித்தார்.

மோடி காலில் விழுந்த ஓபிஎஸ் மகன்
இதன் அடுத்தகட்டமாக அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தது. இத்தேர்தல் களத்தில் மகன் ரவீந்தரகுமாரை களமிறக்கினார் ஓபிஎஸ். தேர்தல் பிரசாரத்தின் போது மோடியின் காலில் ரவீந்தரகுமார் விழுந்தது சர்ச்சையானது.

பாஜகவுடன் நெருக்கம்
மேலும் பிரதமர் மோடி, வாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற போது ஓபிஎஸ் குடும்பத்துடன் கலந்து கொண்டார். பின்னர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடனான ஆலோசனையின் போது அப்பாவும் மகனும் காவி வேட்டியில் காட்சி தந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

அதிருப்தியில் ஓபிஎஸ்
இதனால்தான் தமிழக பாஜகவுக்கு தலைவராகிறாரா? என்கிற பேச்சும் எழுந்தது. ஆனால் இதை மறுக்கும் அதிமுகவினர், ஓபிஎஸ் கட்சியில்தான் நீடிப்பார். அவரைப் பொறுத்தவரையில் என்னதான் துணை முதல்வராக இருந்தாலும் அதிகாரம் முழுவதும் எடப்பாடியிடமே இருப்பதை ஜீரணிக்க முடியாமல் இருக்கிறார். பொதுப்பணிதுறையை வாங்கிக் கொண்டு சமமான அதிகாரப்பகிர்வு வேண்டும் என விரும்புகிறார் ஓபிஎஸ். இதற்குத்தான் பாஜகவுடன் ரொம்பவே நெருக்கம் காட்டுகிறார்.

மத்திய அமைச்சர் பதவிக்கு குறி?
மேலும் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் மகனுக்கு அமைச்சர் பதவி பெற்றுவிட வேண்டும் எனவும் விரும்புகிறார் ஓபிஎஸ். இதை சாதிக்கத்தான் ஓபிஎஸ்-ன் இத்தனை பவ்யமும் நெருக்கமும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications