6 மாவட்டங்களை டார்கெட் செய்யும் ஓபிஎஸ்.. அதிமுக - பாஜக கூட்டணி சந்திக்கும் பாதிப்பு.. கணக்கு மாறுதே!
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 6 மாவட்டங்களை மட்டும் குறி வைத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர். தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல் டெல்டா மாவட்டங்களுக்கும் ஓபிஎஸ் தரப்பு குறி வைத்திருப்பது அதிமுக - பாஜக கூட்டணிக்கு சிக்கலைக் கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக வந்த பிரதமர் மோடியை சந்திக்க முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆர்வமாக இருந்தார். இதற்காக கடிதம் அனுப்பியதோடு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனையும் அணுகி இருந்தார். ஆனால் கடைசி வரை ஓபிஎஸ்-க்கு மோடியை சந்திக்கவோ, வரவேற்கவோ அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் ஓபிஎஸ் தரப்பு அதிருப்தி அடைந்தது.

இதன்பின் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டிலேயே சந்தித்து சுமார் 50 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். அப்போது ஓ.பி.ரவீந்திரநாத் உடனிருந்தார்.
தொடர்ந்து நயினார் நாகேந்திரன், எங்களிடம் கூறி இருந்தால் நாங்களே பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்போம் என்று வார்த்தைகளை விட, ஓபிஎஸ் டென்ஷனாகினார். நயினார் நாகேந்திரனை 6 முறை தொடர்பு கொண்ட போது, அவர் செல்ஃபோனை எடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் 2 முறை ஓபிஎஸ் தனது செல்ஃபோனில் இருந்த மெசேஜையும் நேரடியாகக் காட்டினார். இது தமிழக பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்த விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரனை வாய் திறக்கவிடாமல் அண்ணாமலை அழைத்துச் சென்றார். இந்த நிலையில் ஓபிஎஸ் அடுத்த கட்ட அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை விடவும், தனது ஆதரவாளர்கள் மற்றும் முக்குலத்தோர் சமூக வாக்குகள் அதிகமுள்ள பகுதிகளில் மக்களைச் சந்திக்க ஓபிஎஸ் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது தென் மாவட்டங்களில் ஏற்கனவே அதிமுக சரிவை சந்தித்து வரும் நிலையில், அதனை பாஜகவை வைத்து சமன் செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் அந்த திட்டத்திற்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டையாக இருக்க ஆலோசித்து வருகிறார். அதாவது தேனி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தஞ்சை பகுதிகளில் முக்குலத்தோர் சமூக வாக்குகள் அதிகம் இருக்கின்றன.
இதனால் இந்த பகுதியில் உள்ள தனது ஆதரவாளர்கள் மற்றும் மக்களைச் சந்திக்க ஓபிஎஸ் முடிவு எடுத்துள்ளார். இதன் மூலமாக பாஜகவுக்கும் மறைமுகமாக சிக்கல் உருவாகும். ஏனென்றால் கடந்த லோக்சபா தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் இருப்பு காரணமாக முக்குலத்தோர் சமூக மக்கள் அதிகளவில் பாஜகவுக்கு வாக்களித்தனர்.
அதனை அறுவடை செய்த பாஜக, இம்முறை தென் மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் ஓபிஎஸ் இம்முறை பாஜக மற்றும் அதிமுகவுக்கு எதிராக திரும்பி இருக்கிறார். இதனால் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களை வேட்பாளர்களாக நிறுத்தினால், அது திமுகவுக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தும்.
ஓபிஎஸ் அவரை நம்பி இருக்கும் ஆதரவாளர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை என்றால், கொஞ்சம் கொஞ்சமாக பலரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் திரும்புவார்கள். இதனைக் கருத்தில் கொண்டே சட்டமன்றத் தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன்பாகவே ஓபிஎஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications