பசும்பொன் கூட்டணி.. எடப்பாடிக்கு ஏற்படும் புது சிக்கல்.. தென் மாவட்டங்களில் உருவாகும் எதிர்ப்பு அலை!
சென்னை: ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மற்றும் சசிகலா ஆகிய புதிய அணியால் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவரம் அறிந்தவகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் தேவர் ஜெயந்தி நாளில் மூவரும் இணைந்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தியதற்கு பின்னணியில் வேறு சில கணக்குகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா புதிய அணி ஒன்று உருவாகி இருக்கிறது. அதாவது அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன் மற்றும் ஒபிஎஸ் ஆகியோர் இணைந்திருந்த சூழலில், தற்போது செங்கோட்டையனும் சேர்ந்துள்ளார். கடந்த மாதமே ஒபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை செங்கோட்டையன் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுகளை பின்பற்றியதால், செங்கோட்டையனின் எதிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென ஒபிஎஸ் உடன் ஒரே காரில் மதுரையில் இருந்து பசும்பொன் வரை சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி இருக்கிறார். இவர்களுடன் டிடிவி தினகரனும் இணைந்ததால், மூவர் அணியாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் மூவர் அணியுடன் சசிகலா இணைந்திருப்பதால், எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல் உருவாகி இருக்கிறது. இவர்கள் மூவரும் சந்திக்க சாதாரணமாக ஒருநாளினை தேர்வு செய்திருக்கலாம். ஆனால் சரியாக தேவர் ஜெயந்தி நாளில் சந்திக்கலாம் என்று முடிவு செய்ததற்கு பின் முக்கியமான ஒரு கணக்கு இருப்பதாக தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கும் முக்குலத்தோர் சமூக மக்களுக்கு தொடக்கம் முதலே பொருந்தவில்லை. குறிப்பாக 2021 தேர்தலுக்கு முன் சட்டசபை கூட்டத்தின் கடைசி நாளில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை அறிவித்தார். இதனால் முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவு அதிமுகவுக்கு குறையத் தொடங்கியது. அதன்பின் முக்குலத்தோர் சமூக மக்களின் முகமாக அறியப்பட்ட ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கினார்.
இதனால் தென் மாவட்டங்களில் அதிமுக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. நாடாளுமன்றத் தேர்தலில் தேனி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஒபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தேவர் ஜெயந்தி நாளில் செங்கோட்டையனுடன் இணைந்து புதிய வியூகம் அமைத்துள்ளதாக தெரிகிறது.
இதன் மூலமாக முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவு அதிமுக பக்கம் செல்வதை தடுப்பதோடு, எடப்பாடி பழனிசாமிக்கும் சிக்கல் உருவாகி இருக்கிறது. ஏனென்றால் கொங்கு மண்டலத்தில் ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையன் செல்வாக்குடன் இருந்து வருகிறார். கடந்த தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தொகுதியில் வென்றது. கோவையில் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.
இம்முறை ஈரோடு மாவட்டத்தில் கூடுதலாக 2 தொகுதிகளையும், கோவை 3 இடங்களில் வென்றால் கூட திமுகவுக்கு லாபம் தான். இதனை தென் மாவட்டங்களில் தான் எடப்பாடி பழனிசாமியால் சரி செய்ய முடியும். ஆனால் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அலையை உருவாக்க மூவர் அணி தயாராகி வருகிறது.
ஏற்கனவே விஜய்யால் பிரியும் வாக்குகளை எடப்பாடி பழனிசாமி சரி செய்ய வேண்டிய தேவை உள்ளது. தற்போது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற முக்கிய தலைகள் தனி அணியாக இணைவது அதிமுகவின் வாக்குகளை மேலும் பிரிக்கும். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு சோதனை மேல் சோதனைகள் வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications