வாய்த் தவறி பேசிய அதிமுக பொருளாளர்.. திண்டுக்கல் சீனிவாசன் எங்கிருந்தாலும் வாழ்கனு வாழ்த்திய ஓபிஎஸ்
சென்னை: மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம் என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வாய்த் தவறி கூறிய நிலையில் அவர் எங்கிருந்தாலும் வாழ்க என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. அதுபோல் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது.

ஏற்கெனவே கொரோனா ஏற்படுத்திய பொருளாதார தாக்கத்திலிருந்தே சிலர் இன்னும் மீண்டும் எழாத போது இந்த விலைவாசி உயர்வை திமுக அரசு கட்டுப்படுத்தத் தவறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மாநில அரசை கண்டித்து திண்டுக்கல் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது வழக்குகளை போட்டு அதிமுகவை முடக்கிவிடலாம்.
இந்த கட்சியை அழித்துவிடலாம் என நினைத்தார்கள். அத்தனையையும் தாண்டி வழக்குகளில் வென்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக, இரட்டை இலை எடப்பாடி பழனிசாமிக்குதான் சொந்தம் என தீர்ப்பாகிவிட்டது. இன்று ஓபிஎஸ் கொடநாடு பிரச்சினையை கிளப்புகிறார். அதற்காக போராட்டம் நடத்த போகிறாராம். என்னமோ கொடநாடு கொலை, கொள்ளையை நாமும் எடப்பாடி பழனிசாமியும் நடத்தியது போல் சொல்கிறார்.
மகளிர் உரிமைத் தொகை அனைத்து மகளிருக்கும் தருவோம் என சொல்லிவிட்டு தற்போது குறிப்பிட்ட நபர்களுக்குத்தான் என நிபந்தனைகளை விதிக்கிறார்கள். இதனால் திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். தமிழகத்தில் மீண்டும் சட்டசபை தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை நாங்கள் மீண்டும் முதல்வராக்குவோம் என தெரிவித்தார்.
உடனே உடன் இருந்தவர்கள் திண்டுக்கல்லாரை அலர்ட் செய்தார்கள். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் என திருத்தி பேசினார். மேலும் உங்கள் (திமுக) ஆட்சியை யாரும் கலைக்க மாட்டார்கள். இன்னும் 3 ஆண்டுகள் இருக்கின்றன. மக்களை நன்றாக கொடுமைப்படுத்துங்கள் என்றார்.
மேலும் அவர் பேசுகையில் இன்று எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆரை போலும் ஜெயலலிதா போதும் தன்னந்தனியாக நம்மை காத்துக் கொண்டிருக்கிறார். அவர் மீண்டும் முதல்வர் ஆவார். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வரை பாடுபட வேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருந்தார்.
நிறைய நிகழ்ச்சிகளில் திண்டுக்கல் சீனிவாசன் வாய்த் தவறி பேசுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் வாய்த் தவறி பேசியது குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திடம் கேட்ட போது, அதற்கு அவர் கூறுகையில் திண்டுக்கல் சீனிவாசன் எங்கிருந்தாலும் வாழ்க என கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications