குலுங்குது சென்னை.. பண்ணை வீட்டில் ஓபிஎஸ் "திடீர்" முடிவு.. எடப்பாடி டீம்?.. நாளை "சம்பவம்" இருக்கு
பண்ணை வீட்டில் ஓபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்
சென்னை: பண்ணை வீட்டில் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்ட ஓபிஎஸ், நாளைய தினம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. மேலும் எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சி தரக்கூடிய சில காய்நகர்த்தலையும் கையில் எடுக்க போகிறாராம் ஓபிஎஸ்.
எடப்பாடியின் பிடிவாதம் குறையவே இல்லை.. ஒருங்கிணைந்த அதிமுக மட்டுமே தேவை என்று மேலிட பாஜக சொல்லியும் காதில் வாங்கவில்லை..
ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா 3 பேரை மட்டும் கட்சிக்குள் இணைத்து கொள்ளும்படி நிர்ப்பந்திக்க கூடாது என்றும், தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க, அறிவிக்க செய்யும்படியும் மேலிடத்தை கேட்டுக் கொண்டு வருவதாக தெரிகிறது..

அப்பாயிண்ட்மென்ட்
பாஜகவை ஒரேடியாக எதிர்க்க முடியாத அளவுக்கு பலவித நெருக்கடிகள் கலந்த சூழல், எடப்பாடிக்கு இருந்தாலும்கூட, தன் முடிவில் உறுதியாக இருந்து வருகிறார். நான்தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்று எடப்பாடி ஒருபக்கம் சொல்லி வந்தால், நான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ்ஸும் சொல்லி வருகிறார்.. அத்துடன், புதிதாக மாவட்ட செயலர்களையும் நியமித்துள்ளார்.. ஒவ்வொரு மாவட்டத்துக்கும், புதிய நிர்வாகிகளையும் நியமித்துள்ளதுடன், பொதுக்குழு உறுப்பினர்களும் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்...

லிஸ்ட் ரெடி
பெரும்பாலான மாவட்டங்களுக்கு, நிர்வாகிகள் நியமனம் நிறைவடைந்துவிட்டதாகவும், ஓரிரு மாவட்டங்களில் மட்டுமே நிர்வாகிகள் நியமனம் பாக்கி உள்ளதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல் வந்தது.. அந்த மாவட்டங்களிலும் நிர்வாகிகள் நியமனத்தை முடித்துவிட்டு, மாவட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்ட, ஓபிஎஸ முடிவு செய்துள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.. இந்நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனம் முடிவடைந்த நிலையில் புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை ஓபிஎஸ் நாளைய தினம் கூட்ட உள்ளார்...

காய்நகர்த்தல்
சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தெரிகிறது.. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த பிறகு, பத்திரிக்கையாளர்களை சந்தித்து தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றிய அறிவிப்புகளை அவர் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. இதனால் அதிமுகவில் ஒருவித பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

பண்ணை வீட்டிலே
இதனிடையே, கடந்த 2 நாட்களாகவே பெரியகுளம் பண்ணை வீட்டில், தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியுள்ளார்.. ஒவ்வொரு மாவட்டத்திலும் தனக்கு ஆதரவான நிர்வாகிகளின் லிஸ்ட்டை வெளியிட உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளவர்களை வளைக்கும் முயற்சியிலும் ஓபிஎஸ் ஈடுபட்டு வருவதாக சொல்கிறார்கள்.. அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பண்ணை வீடு
போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகளை வளைக்கும் முயற்சியிலும் ஓபிஎஸ் தரப்பினர் ஈடுபட்டு வருகிறார்களாம்.. நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள், 100 தலைமை நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.. புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.

எகிறும் BP
இதனைதொடர்ந்து இந்த மாதத்தின் கடைசியில், பொதுக்குழுவை கூட்டவும் திட்டமிட்டுள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். நாளை நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகளை ஓபிஎஸ், வெளியிட இருப்பதால் தமிழகம் முழுவதிலும் இருந்து அவரது ஆதரவாளர்கள் சென்னையில் இன்றே திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.. வெளி மாவட்டங்களை சேர்ந்த மாநில நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரும் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பண்ணை வீட்டில் கடந்த 2 நாட்களாக தங்கி இருந்து பல்வேறு ஆலோசனைகளை நடத்தி முடித்த ஓபிஎஸ், சென்னையிலும், இன்றைய தினம் ஆலோசனை நடத்தி வருகிறார்.. மொத்தத்தில், ஓபிஎஸ் கூடாரத்தில் என்ன நடக்கிறது என்பதை எடப்பாடி தரப்பும் ஆவலுடன் கவனித்து வருகிறதாம்..!!












Click it and Unblock the Notifications