போயஸ் வீடு முன் தண்டோரா போட்டவர் ப. சிதம்பரம்.. அம்மா நின்று கொல்கிறார்.. ஓ.எஸ். மணியன்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸை பிடிக்காத கட்சியினர், இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுலில் ஆரம்பித்து அவ்வியக்கத்தின் கடைசி தொண்டன் வரையில் அத்தனை பேரையும் போட்டு திட்டித் தீர்ப்பார்கள். ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஒரு தலைவர் மீது விமர்சனம் வைக்க மட்டும் தயங்குவார்கள். அது.... ப.சிதம்பரம்.
சிதம்பரம் மற்ற அரசியல்வாதிகள் போல் டாய், டூயென அதிரடி நபரில்லை. ஆனால் கத்தி முனை போன்ற காரியங்களை கன கச்சிதமாக, செம்ம ஷார்ப்பாக செய்து முடித்துவிடுவார். மேலும் தர்க்க ரீதியாக அவர் எடுத்து வைக்கும் வாதங்களுக்கு அவ்வளவு எளிதாகவெல்லாம் பதிலடி தருவதோ, அதிலிருந்து தப்பிப்பதோ சாத்தியமில்லை. இதனாலேயே வாயை கொடுத்து மாட்டிக் கொள்ளாமல் தவிர்ப்பார்கள் சக அரசியல்வாதிகள்.
காலமெல்லாம் தங்களோடு கூட்டணியில் இருந்தாலும் கூட ப.சிதம்பரத்திடமிருந்து கருத்து முரண்பட்டும், இடைவெளி விட்டும்தான் இருப்பார் கருணாநிதி. அப்படியானால் காங்கிரஸை எதிரியாக மட்டுமே பார்த்த ஜெயலலிதாவுக்கும், சிதம்பரத்துக்கு இடையிலான காரசாரங்களை யோசித்துப் பாருங்கள். இருவருமே செம்ம டிப்ளமேடிக்காக அரசியல் விவகாரங்களையும், பர்ஷனல் பழிவாங்கல்களையும் செய்து கொள்வார்கள்.
அதெல்லாம் இருக்கட்டும்....

ஓஎஸ் மணியன் கோபம்
இப்போது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விசாரணையிலிருக்கிறார் சிதம்பரம். இந்த சூழலில் அவரை வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் போட்டுப் பொளக்கிறது அ.தி.மு.க. அந்த வகையில் தமிழக கைத்தறி துறை அமைச்சரான ஓ.எஸ். மணியன் இப்படி பதறவிட்டிருக்கிறார் ப.சி.யை....

தைரியசாலி ஜெயலலிதா
"சட்டம், கைதுக்கு பயந்து ஓடி ஒளிவது என்பதே சட்ட விரோதம்தான். மறைந்த முதல்வர் அம்மா (ஜெ.,) அவர்களை போலீஸ் கைது செய்ய வந்தபோது எனக்கு பத்து நிமிஷம் மட்டும் அவகாசம் கொடுங்கள் என்று கூறிவிட்டு, தன்னை கைது செய்ய வந்த போலீஸுக்கு டீ கொடுத்து உபசரித்துவிட்டுக் கிளம்பினார் தைரியமாக.

ஜெ.வுக்கு எதிரான துஷ்ட அரசியல்
ஆனால் இந்த சிதம்பரமோ கைதுக்கு பயந்து முன் ஜாமீன் கேட்டார், ஓடி ஒளிந்தார். சட்டத்தினால் முன் ஜாமீன் மறுக்கப்பட்ட பிறகே, சி.பி.ஐ. வேறு வழியின்றி சுவரேறிக் குதித்துக் கைது செய்தது. இதில் தவறே இல்லை. அம்மாவுக்கு எதிராக சிதம்பரம் செய்த துஷ்ட அரசியல் அசாதாரணமானது. அம்மாவை அரசியலில் இருந்தே அகற்ற துடித்த தலைவர்களில் இந்த சிதம்பரமும் ஒருவர்.

தண்டோராவை மறக்க முடியுமா
தமிழக மற்றும் தேசிய அரசியலின் பெரும் சக்தியாக உருவெடுத்த அம்மா மீது பழிவாங்கல் நடவடிக்கையாக அப்போதைய மாநில மற்றும் மத்திய அரசுகள் பொய்யான சொத்துக் குவிப்பு வழக்குகளை போட்டனர். அந்த சதியில் சிதம்பரத்துக்கும் பங்கு உண்டு. அம்மா வருமான வரி கட்டவில்லை என்று, போயஸ் தோட்ட இல்ல வாசலில் தண்டோரா போட வைத்து, அவரை அவமானப்படுத்தியவர் இந்த ப.சிதம்பரம்.

தலையெடுக்க முடியாது
சிதம்பரம் முற்பகல் செய்த அதிகார துஷ்பிரயோகங்களின் பலனை பிற்பகலில் அனுபவிக்கிறார். தெய்வம் மட்டுமல்ல எங்கள் அம்மாவும் நின்று கொல்வார் தனக்கு தீங்கிழைத்த கயவர்களை. என்னைப் பொறுத்தவரையில் தேசிய அளவில் சிதம்பரத்தின் பெயர் களங்கப்பட்டுவிட்டது. இனி தன்னை அரசியல் தலைவனாகவெல்லாம் அவர் அடையாளப்படுத்திக் கொள்ளவோ, தலையெடுக்கவோ முடியாது." என்று பொங்கிக் முடித்திருக்கிறார்.
- ஜி.தாமிரா












Click it and Unblock the Notifications