"திமுக வேண்டாம்".. விஜய்யின் தவெகவிற்கு கைகொடுக்கும் காங்கிரஸ்? போட்டுடைத்த கிரீஷ் சோடங்கர்
சென்னை: ''தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக தான் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் பயணித்தது. இருப்பினும் 'இந்தியா' கூட்டணி என்ற கட்டாயம் மற்றும் நீண்டகால உறவு போன்ற விஷயங்களால் மேலிடம் திமுக கூட்டணியை முடிவு செய்தது. இந்த முடிவால் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானவர்கள் கோபம் அடைந்தனர். சிலர் தவெகவை நோக்கி சென்றனர். '' என்று காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் ஒப்புக்கொண்டுள்ளார். அதோடு தவெகவிற்கு காங்கிரஸ் கட்சி, தவெகவிற்கு ஆதரவு வழங்குமா? என்பதற்கும் அவர் முக்கிய பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவு பற்றி காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தவெக கூட்டணியை விரும்பிய தொண்டர்கள்
தமிழகத்தில் உள்ள உள்ளூர் தலைவர்கள், நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி, தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறினார்கள். ராகுல் காந்தி, விஜய் உடன் சேர்ந்து பிரசாரம் செய்தால் மக்கள் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பு இருக்கும். அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழ்நாட்டை மொத்தமாக ஸ்வீப் செய்யமுடியும். குறைந்தபட்சம் 180 முதல் 190 தொகுதிகளில் வெல்ல முடியும் என்றனர்.
மாநிலத்தில் பெண்களும், இளைஞர்களும் மாற்றத்தை நோக்கி வாக்களித்துள்ளனர். இது புதிய கட்சிக்கு (தவெக) ஆதரவாக மாறி உள்ளது. இந்த முடிவு தான் முதல்வரையே அவரது தொகுதியில் தோற்கடித்துள்ளது. தவெக நன்றாக செயல்படும் என்பதை நாங்கள் உணர்ந்து இருந்தோம்.
தொண்டர்கள் முடிவுக்கு மாறாக..
இருப்பினும் 'இந்தியா' கூட்டணி என்ற கட்டாயம் மற்றும் நீண்டகால உறவு போன்ற விஷயங்களால் மேலிடம் திமுக கூட்டணியை முடிவு செய்தது. இந்த முடிவால் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானவர்கள் கோபம் அடைந்தனர். சிலர் தவெகவவை நோக்கி சென்றனர். நாங்கள் எங்களின் தனிப்பட்ட நலனுக்காக இந்த முடிவை எடுக்கவில்லை. கவனமாக பரிசீலனை செய்து தான் எங்களின் கட்சி திமுக கூட்டணியை தேர்வு செய்தது.
தவெகவிற்கு ஆதரவா?
தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே தான் முடிவு செய்வார். தமிழகத்தின் நிலை பற்றி விளக்கி உள்ளோம். மக்களின் முடிவை திரித்து கூறுவதை விட அதை மதிப்பது அவசியம். மக்களின் தீர்ப்பு மாற்றத்துக்கானதாக உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நாம் தலைவணங்க வேண்டும். மக்களின் தீர்ப்புக்கு எதிராக செல்ல நாங்கள் விரும்பவில்லை'' என்றார்.













Click it and Unblock the Notifications