’உங்களுடன் ஸ்டாலின்’ வீட்டுக்கே வரும் அதிகாரிகள்..ஒரே நாளில் குவிந்த மனுக்கள்! வெளியான முக்கிய தகவல்
சென்னை: அரசு சேவைகளுக்காக மக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்து பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று அரசு சேவைகளை வழங்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கடந்த 15ஆம் தேதி துவக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரே நாளில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவற்றில் 50 ஆயிரம் மனுக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அரசுத்துறைகள் மூலம் பட்டா மாறுதல், இருப்பிடச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளை பெறுவதற்கு அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வரின் முகவரி துறை மூலமாக பல்வேறு சேவைகளை ஒன்றாக இணைத்து பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.
தொடர்ந்து பொதுமக்களிடம் மனுவை பெற்ற 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த நடவடிக்கைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து அரசின் சேவைகளை பெற அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் மக்களை தேடி அதிகாரிகளே செல்லும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று முன் தினம் இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை 10,000 மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மட்டும் 1400க்கும் மேற்பட்ட நகர்ப்புற பகுதிகளிலும், 2100க்கும் மேற்பட்ட ஊரகப் பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. வாரம் தோறும் திங்கள், சனி, ஞாயிறு தவிர்த்து மற்ற நான்கு நாட்கள் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் சேவைக்காக அணுகும் நகராட்சி நிர்வாகம், குடிநீர், வருவாய், மருத்துவம்,எரிசக்தி, கூட்டுறவு, உணவு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், சிறுபான்மை நலத்துறை, தொழிலாளர் நலன், வீட்டு வசதி, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், சமூக நலன், மகளிர் உரிமைத்தொகை, தகவல் தொழில்நுட்பத் துறை, டிஜிட்டல் சேவை உள்ளிட்ட 13 அரசு துறைகள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு அதற்காக ஒப்புதலும் வழங்கப்படுகிறது.
கூடுதலாக இந்த முறை மகளிர் உரிமை தொகைக்காக விடுபட்ட பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் முகாம் தொடங்கிய முதல் நாள் மட்டுமே ஒரு லட்சத்து 25 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 50,000 மனுக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி பெறப்பட்டுள்ளதாக அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் வெள்ளிக் கிழமை வரை இந்த சிறப்பு முகாம் நடைபெற இருக்கும் நிலையில் பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்கிறனர் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications