திருவள்ளூர் ரயில் விபத்து! முழுமையாக மீட்கப்பட்ட பயணிகள்! நள்ளிரவில் விரைந்த துணை முதல்வர் உதயநிதி.!
சென்னை: திருவள்ளூர் அருகே கவரைபேட்டையில் ரயில் விபத்தில் சிக்கிய சுமார் 1400க்கும் மேற்பட்ட பயணிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழுப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதற்கிடையே சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மைசூர் தர்பாங்க இடையே பாக்மதி வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயில் இயக்கப்படுகிறது. கர்நாடகாவில் புறப்படும் இந்த ரயில் தமிழகம் வழியாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து பீகார் மாநிலம் தர்பங்காவை சென்றடைகிறது.

தமிழகத்தில் ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய நிறுத்தங்களில் இந்த ரயில் நின்று செல்லும். இந்த நிலையில் சுமார் 8 மணிக்கு பெரம்பூரில் இருந்து புறப்பட்ட ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சென்ற போது திடீரென விபத்து ஏற்பட்டது.
சிக்னல் கோளாறு காரணமாக லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூர் தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ரயில் இன்ஜினில் இருந்து சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விபத்து குறிப்பு தகவல் அறிந்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக மீட்பு பணிகளில் இறங்கினர். மேலும் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் தன்னார்வலர்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் விபத்து நடந்த பகுதிக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களும் உடனடியாக களத்தில் இறங்கினர். சுமார் 3 மணி நேர மீட்பு பணிகளுக்கு பிறகு சுமார் 1400க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் முழுமையாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில் 19 பேர் காயம் அடைந்தனர். 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் மூன்று பேருக் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒருவருக்கு தலைக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து விபத்தில் சிக்கிய காயம் அடைந்த அனைவரும் உடனடியாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு அப்பகுதியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மின்சார ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் சிறப்பு ரயில் மூலம் தங்கள் பயணத்தை தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சர் ஆவடி நாசர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"விபத்தில் உள்ளது ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர் ரயில் விபத்துக்கள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இந்த நிலையில் தற்போது அங்கு மீட்பு பணிகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில், இடிபாடுகளை அகற்றி ரயில் பாதையை சரி செய்யும் பணி தொடங்க உள்ளது. தற்போது ஒவ்வொரு ரயில் பெட்டியாக சென்று தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு பயணிகள் யாரும் சிக்கி உள்ளார்களா என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications