சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு! குவிக்கப்பட்ட 16,000 போலீசார்.. சிறப்பு ஏற்பாடுகள்
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கடலில் கரைக்கப்பட உள்ளன. இதற்காக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, கடந்த 27 ஆம் தேதி இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பொது இடங்களில், விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட்டனர். சென்னையில் 1500க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். சென்னை பெருநகர காவல்துறை சார்பில், போலீசார் இருசக்கர மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகனங்களிலும் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னையில் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற இருக்கின்றன. சென்னையில் உள்ள பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான விநாயகர் சிலைகள் பக்தர்களால் கடற்கரைப் பகுதியில் உள்ள 4 இடங்களுக்கு கொண்டு வரப்பட உள்ளன.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீனிவாசபுரம், திருவான்மியூரில் உள்ள பல்கலை நகர், புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள N4 மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பகுதியில் உள்ள பாப்புலர் எடை மேடை ஆகிய நான்கு இடங்களுக்கு விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட உள்ளன.
விநாயகர் சிலை ஏற்றிச் செல்லும் வாகனங்களுடன், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகளைக் கரைக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் முன்பே உத்தரவிடப்பட்டுள்ளன.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில், 1,519 சிலைகள், கடலில் கரைக்கப்பட உள்ளன. இதற்காக, சென்னை முழுதும், 15,000 போலீசாரும், 2,000 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் பாதுகாப்புக்காக 5 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டினப்பாக்கம் சாலையில் உள்ள மின்விளக்குக் கம்பங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. கடற்கரைப் பகுதிகளில் மட்டும் 1,600 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
2 தீயணைப்பு வாகனங்கள், 4 ஆம்புலன்ஸ்கள், மோட்டார் படகுகள் மற்றும் நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிகக் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க கடந்த ஆண்டு மூன்று கிரேன்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதிக சிலைகள் வருவதைக் கருத்தில் கொண்டு, மொத்தம் 5 கிரேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெரிய சிலைகளை ஏற்றி வரும் வாகனங்கள் எளிதாகச் செல்ல, கடற்கரை மணல் மீது ஒரு அடி உயரத்துக்கு மண் கொட்டப்பட்டுள்ளது.
7 அடிக்குக் குறைவான சிலைகளை ரேம்ப் மூலம் கடலில் தள்ளிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சிறிய சிலைகளைக் கரைக்க மூன்று தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிலைகளைக் கொண்டுவரும் வாகனங்கள், காவல்துறை அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications