படபடவென வெடித்த பாட்டாசுகள்.. தீபாவளியன்று தமிழகத்தில் இத்தனை விபத்துகளா? வெளிவந்த முக்கிய தகவல்!
சென்னை: உலகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் ஏற்பட்ட சிறு சிறு பட்டாசு விபத்துகளால் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீப ஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகை நேற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் வழக்கம் போல பெரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது.

அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்தும் இனிப்புகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கியும் மக்கள் தீபாவளி பண்டிகையை பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
தொடர்ந்து வான வேடிக்கைகள், சரவெடிகள் உள்ளிட்ட வெடிகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இரவு நேரங்களில் இரவை பகலாக்குவது போல வான வேடிக்கைகளால் தமிழகம் முழுவதும் ஜொலித்தது. இந்த நிலையில் சிலர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியும் உரிய நடைமுறைகளை பின்பற்றாததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு விபத்துக்கள் நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிறுசிறு விபத்துகளில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 304 பேர் காயம் அடைந்துள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தீபாவளி அன்று மட்டும் தீயணைப்புத் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்களிடமிருந்து 128 அழைப்புகள் வந்திருக்கிறது. அதில் பட்டாசு விபத்து காரணமாக தீப்பிடித்தது என 97 அழைப்புகள் வந்திருக்கிறது. பட்டாசுகள் இல்லாமல் பிற காரணங்களால் 31 இடங்களில் தீ விபத்துகள் நடந்து இருக்கிறது.
மேலும் பிற விபத்துகளில் மொத்தம் 544 பேர் காயமடைந்து இருக்கின்றனர். சென்னையில் மட்டும் 48 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. பட்டாசு வெடித்ததில் விபத்து காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு தீபாவளி தீ விபத்துகள் குறைந்துள்ளது. பொது மக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றியது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தீ விபத்துகள் குறைந்துள்ளன.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் மற்றும் நேற்று 11 இடங்களில் ராக்கெட் விடிகளால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. மேட்டுப்பாளையத்தில் ஒலம்பஸ் பகுதியில் 2 வீடுகள், தொண்டாமுத்தூர், அன்னூர் ,கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் ராக்கெட் வெடிகள் விழுந்து குடிசை வீடுகள் தீப்பிடித்தன. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளியன்று வெடி வெடித்ததில் 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மட்டும் 13 தீயணைப்பு நிலையங்களில் 110 வீரர்கள் பணியில் இருந்தனர். 16 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது. தீ விபத்து குறித்து தகவல் தெரிந்ததும் உடனடியாக தீ அணைக்கப்பட்டது. குடிசை வீடுகள் என்பதால் பெரிய அளவில் ஆபத்து இல்லை. யாருக்கும் காயம் இல்லாமல் மீட்கப்பட்டனர். அதே நேரத்தில் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க தீபாவளி பண்டிகை காரணமாக தொடர்ந்து இரண்டு நாட்களாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் நாட்டின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றது. டெல்லி சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு புகைமண்டலமாக காணப்பட்டது. டெல்லி ஆனந்த விகார் பகுதியில் காற்றின் தரம் 396 பதிவானது. மும்பை மத்திய பிரதேசத்தின் புஜார் நகரம் மோசமான பிரிவில் இருந்தது. சென்னையிலும் அதே நிலைதான், இன்று காலை நிலவரப்படி காற்றின் தரம் 158 ஆக குறைந்தது.












Click it and Unblock the Notifications