நான்கு நாட்களுக்கு பிறகு.. தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு.. காரணம் என்ன
சென்னை: தலைநகர் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாலேயே ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக கொரோனா டிராக்டர் விஜயானந்த் குறிப்பிட்டுள்ளார்
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கிற்குப் பிறகு மாநிலத்தில் வைரஸ் பரவலின் வேகம் சற்று குறைந்திருந்தது. கடந்த சில தினங்களாகவே மாநிலத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு 33 ஆயிரத்திலேயே இருந்தது.
இந்நிலையில், இன்று கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 வயதுக்குட்பட்ட 1307 பேர் உட்பட மொத்தம் 34875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து கொரோனா டிராக்டர் விஜயானந்த் புதிய தகவல்களை பகிர்ந்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளதால் கடந்த சில தினங்களாக வைரஸ் பாதிப்பு குறைந்திருந்தது.
அதேநேரம், தற்போது மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. சராசரியாக மாநிலத்தில் 1.55 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மாநிலத்தில் தற்போது கொரோனா பாசிட்டிவ் விகிதம் 21.6%ஆக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.