பதற வைக்கும் ப.சிதம்பரம் பதிவு.. புதிய தண்டனை சட்டத்தில் சுதந்திரம் பறிப்பா? கொடூரமா இருக்காம்
சென்னை: மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் புதிய இந்திய தண்டனைச் சட்டம் மிகவும் கொடூரமானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்து உள்ளார்.
மத்திய அரசு நடைமுறையில் உள்ள பழைய குற்றவியல் சட்டங்களான ஐபிசி, சிஆர்பிசி, எவிடன்ஸ் ஆக்ட் போன்றவற்றை மறுசீரமைக்கும் விதமாக புதிதாக 3 குற்றவியல் சட்ட மசோதாக்களை மக்களவையில் கொண்டு வந்து அண்மையில் அது நிறைவேற்றப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா என இந்தியில் பெயரிடப்பட்டு உள்ள அந்த 3 மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 12 ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்தார்.

நாடாளுமன்ற அத்துமீறலை கண்டித்து குரல் எழுப்பிய 142 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்த நேரத்தில் இதன் மீதான விவாதம் மக்களவையில் நடத்தப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் இச்சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த 3 புதிய குற்றவியல் தடுப்பு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் இந்த 3 சட்டங்களையும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்து உள்ளார்.
அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், "கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் முடிவடைய இருக்கும் நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 3 குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். புதிய இந்திய தண்டனைச் சட்டம் மிக கொடூரமானது. ஏழை மக்கள், தொழிலாளர்கள் மற்றும் நலிவடைந்த வகுப்பினரை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் கருவியாக இந்த சட்டம் இருக்கும். விசாரணைக் கைதிகள் உட்பட பெரும்பாலான கைதிகள் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்.
அரசியலமைப்புக்கு முரணான மற்றும் அரசியலமைப்பின் 19 மற்றும் 21 வது பிரிவுகளை மீறும் பல விதிகள் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் உள்ளன. புதிய தண்டனைச் சட்டம் மற்றும் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின் பாதிப்பை ஏழைகளும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருமே சுமக்கும் நிலை வரும். புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் சரியானவற்றை வலுப்படுத்துவதற்குப் பதில், சுதந்திரத்தையும் தனிநபர் உரிமையையும் கட்டுப்படுத்தும் பல விதிகள் உள்ளன.
ஒரு சிறைக் கைதிக்கு 60 முதல் 90 நாட்கள் வரை காவல்துறை காவலை நீட்டிக்க முடியும் என்ற புதிய விதி இதில் உள்ளது. இது காவல்துறையின் அத்துமீறலுக்கு உதவும். 2024 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் இந்தச் சட்டங்களை முதலில் மறு ஆய்வு செய்து, கடுமையான விதிகளை அகற்ற வேண்டும்," என குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications