29+2..? ஸ்டாலின் சொன்னது என்ன? காரை ஓரமாக நிறுத்திவிட்டு செல்போனில் ப சிதம்பரம் அவசர ஆலோசனை
சென்னை: திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலினுடன் - ப சிதம்பரம் சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 29 + 2 வழங்க திமுக முன்வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தை முடிந்ததும் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் காரில் புறப்பட்டு சென்ற ப சிதம்பரம், நுங்கம்பாக்கத்தில் காரை நிறுத்தி காங்கிரஸ் தலைமையிடம் ஸ்டாலின் பேசியது குறித்து செல்போனில் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக காங்கிரஸ் கூட்டணியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகையால் காங்கிரஸில் உள்ள சில நிர்வாகிகள் ஆட்சியில் பங்கு, அதிக சீட் உள்ளிட்ட கோரிக்கையினை திமுகவிடம் எழுப்பினர்.

திமுக காங்கிரஸ் கூட்டணி
மேலும் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கூட்டணியில் புகைச்சல் ஏற்படும் வகையில் அவ்வப்போது பேசி வந்ததும் திமுகவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆட்சியில் பங்கு இல்லை என்பதை திமுக உறுதியாக கூறிவிட்டதால் அதிக சீட்களை கேட்க காங்கிரஸ் முடிவு செய்தது.
அதன்படி 39 தொகுதிகளை திமுகவிடம் கேட்டது. ஆனால் திமுக 25 தொகுதிகள் மட்டுமே தரமுடியும் என கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டதாகவும், இருந்தால் இருங்க.. இல்லையெனில் ஒன்றுமில்லை என்ற அளவுக்கு பேசிவிட்டதாகவும் தகவல் கசிந்தது.
36 தொகுதிக்கு குறைய கூடாது
திமுக - காங்கிரஸ் கூட்டணி விவகாரம் தொடர்பாக சோனியாக காந்தியும் டெல்லியில் அவசரமாக மீட்டிங் நடத்தியுள்ளார். ராகுல் காந்தி மற்றும் வேணுகோபால் ஆகியோரை அழைத்து பேசியுள்ளார். அப்போது ராகுல் காந்தி விஜய்யுடன் கூட்டணி வைக்கவே விருப்பம் தெரிவித்தாராம். ஆனால் சோனியா காந்தி திமுகவுடன் கூட்டணி வைக்கவே வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்று கூறிவிட்டதால், ராஜ்யசபா சீட்டாவது 2 கொடுக்க வேண்டும் என்றும் 36 தொகுதிகள் வேண்டும் என கேட்டுப்பாருங்கள்.. கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி வைப்போம் என முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படியே இந்த முறை கிரிஷ் சோடங்கருக்கு பதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தை ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தது.
ஸ்டாலின் - ப சிதம்பரம் பேச்சுவார்த்தை
இதன்படி இன்று ப சிதம்பரம் திமுக தலைவர் ஸ்டாலினின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஆலோசனையானது சுமார் 1 மணி நேரம் நீடித்தது. அப்போது முதலில் 25 + 1 என்று சொல்லியிருந்த திமுக இந்த முறை 29 + 2 வரை அதிகரித்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் காங்கிரஸ் 36 தொகுதி என்று கூறியிருந்தும் திமுக 29 வரை மட்டுமே தருவதற்கு முன் வந்துள்ளதால் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆலோசனை முடிந்து வெளியே வந்த கார்த்தி சிதம்பரமும் செய்தியாளர்களிடம் எதுவும் தெரிவிக்காமல் காரில் வேகமாக புறப்பட்டு சென்றார்.
நுங்கம்பாக்கத்தில் நின்ற கார்
இந்த நிலையில் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை காரை நிறுத்திய ப சிதம்பரம், செல்போனில் காங்கிரஸ் தலைமையிடம் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்பதற்காக சென்றபோது, முக்கியமாக பேசிக்கொண்டிருக்கிறோம்.. இங்கிருந்து செல்லுங்கள் என கூறுவது போல் கையால் சைகை காண்பித்தார்.
வீட்டிற்கு சென்ற பிறகு காங்கிரஸ் தலைமையிடம் பொறுமையாக பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வீட்டுக்கு செல்லும் வழியிலேயே காரை பாதியில் நிறுத்தி ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் என்ன முடிவு எடுக்கப்படும் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications