இப்போ விவசாயிகள் ஹேப்பி அண்ணாச்சி... எடப்பாடியாருக்கு கோடி நன்றி... உருகும் பி.ஆர். பாண்டியன்!
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ள 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வரின் அறிவிப்புக்கு தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நன்றி கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு விவசாயிகள் மீது இரண்டாம் சுதந்திர போராட்டம் போல் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் பி.ஆர். பாண்டியன் குற்றம்சாட்டினார்.
அசத்தல் அறிவிப்பு
கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ள 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வரின் அறிவித்தார். இதற்கு தமிழகம் முழுவதும் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியனும் இதனை வரவேற்றுள்ளார்.
பயிர்கடன் தள்ளுபடி
இது தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளரிடம் பேசிய பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:- ஆயிரத்து 110 கோடி ரூபாயை முழுமையாக விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்து விவசாயிகள் பலன் அடைய முழுமையான அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வருக்கு நன்றி
இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு பல பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம் 2012-ம் வருடத்திலிருந்து விவசாயிகள் பல பேர் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வந்தனர். தற்பொழுது இதை தமிழக அரசு தெரிவித்திருக்கிறது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுதந்திர போராட்டம் போல் நடவடிக்கை
மத்திய அரசு விவசாயிகள் மீது இரண்டாம் சுதந்திர போராட்டம் போல் நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்தியில் ஆளும் மோடி அரசு விவசாயிகளுக்கு கடும் வஞ்சகத்தை செய்துவருகிறது. வருகிற நாட்களில் விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறோம் என்று பி.ஆர். பாண்டியன் கூறினார்.