ஹைட்ரோ கார்பன் திட்டம்: எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பி.ஆர்.பாண்டியன்
சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் சந்தித்தார்.
திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் கிணறுகள் உள்ளன. அதில் கடந்த 2013 ஆம் ஆண்டு எரிவாயு கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் கடுமையாக எதிர்த்ததால் அந்த கிணறு மூடப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு திரும்பவும் அந்த கிணற்றிலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி ஆயத்தமானது. அப்பகுதி மக்களின் கடும் போராட்டத்தால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இந்த நிலையில் காவிரி டெல்டா பகுதி வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் புதிய எண்ணெய் கிணறுகளைத் தோண்டுவதற்கு ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு தமிழகத்தில் அனுமதி தரப்படவில்லை. அதனால் பழைய கிணறுகளில் இருந்து மீண்டும் எண்ணெய் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அந்த நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பெரியகுடியிலுள்ள பழைய கிணற்றிலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி திட்டமிட்டது. அதற்காக ஒப்புதல் வேண்டி தமிழக அரசு அணுகிய நிலையில் அந்த கிணற்றைப் பயன்படுத்துவது குறித்த மக்களின் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள், பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிராக வரும் 15-ஆம் தேதி நடத்தவுள்ள உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாய சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பி.ஆர்.பாண்டியன் அழைப்பு விடுத்தார். தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications