ஆளுநர் செய்தது தவறு.. இது தமிழ்நாடு மக்களுக்கு எதிரான முடிவு.. இயக்குனர் பா.ரஞ்சித் கடும் விமர்சனம்!
சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை இயக்குனர் பா. ரஞ்சித் விமர்சனம்
செய்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றியது. இதையடுத்து மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி இருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மசோதாவை சபாநாயகருக்கே ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இந்த நிலையில் நீட் விலக்கு மசோதா ஆளுநர் மூலம் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது என தமிழ்நாடு அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆளுநர் முடிவு
தமிழ்நாடு சிறப்பு சட்ட மன்ற கூட்டத்தொடர் வரும் 8ம் தேதி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மீண்டும் இதே மசோதா நிறைவேற்றப்படும். பின்னர் அந்த மசோதா மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்படும். இந்த முறை சட்டப்படி ஆளுநர் இந்த மசோதாவை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த நிலையில் ஆளுநரின் இந்த முடிவிற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இயக்குனர் பா. ரஞ்சித் ஆளுநரின் இந்த முடிவை விமர்சனம் செய்துள்ளார்.

பா. ரஞ்சித்
சென்னையில் "இளைஞர்கள் பார்வையில் வடசென்னை" என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் வடசென்னையில் இளைஞர்கள் எடுத்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த கண்காட்சி பெரிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில் நேற்று இயக்குனர் பா. ரஞ்சித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பா. ரஞ்சித் ஆளுநர் குறித்தும், நீட் விலக்கு மசோதா பற்றியும் பேசினார்.

பா. ரஞ்சித் ஆளுநர்
அதில், நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து இருக்க வேண்டும். அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது மிகவும் தவறானது. ஆளுநரின் செயல்பாடு சரியில்லை. இது தமிழ்நாடு மக்களின் உணர்வு. அதை திருப்பி அனுப்புவது என்பது ஏற்புடையது அல்ல. அவரின் முடிவு முழுக்க முழுக்க தமிழ்நாடு மக்களுக்கு எதிரான முடிவு என்று இயக்குனர் பா. ரஞ்சித் துணிச்சலாக குறிப்பிட்டார்.
Recommended Video

பா. ரஞ்சித் நீட்
அதோடு வடசென்னை என்பதை மக்கள் அழுக்காக காட்டி இருக்கிறார்கள். இல்லையென்றால் அதிக மக்கள் தொகை வசிக்கும் நெருக்கடியான பகுதியாக காட்டி இருக்கிறார்கள். ஆனால் வடசென்னையின் உண்மையான அழகை இந்த புகைப்பட கண்காட்சியில்தான் காட்டி உள்ளனர். வடசென்னை மக்களிடம் இருக்கும் அழகியல், அரசியலை இந்த புகைப்பட கண்காட்சியில் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர் என்றும் பா. ரஞ்சித் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications