மீண்டும் தலைதூக்கும் "ரூட்டு தல" பிரச்சினை.. சென்னையில் பட்டாக்கத்தியுடன் மோதல்.. மாணவர்கள் அராஜகம்
சென்னை: சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருதரப்பு மாணவர்கள் கையில் பட்டாக்கத்தியுடன் மற்றொரு தரப்பு மாணவர்களை துரத்திச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் பச்சையப்பன் கல்லூரி - மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இவர்கள் தாங்கள் செல்லும் பேருந்து மற்றும் ரயில் வழித்தடங்களில் ரூட்டு தல என ஒரு மாணவரை நியமிப்பது வழக்கம்.
இதில் யார் கெத்தான ரூட்டு தல என்பதில் மேற்கூறிய இரு கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் அவ்வப்போது பயங்கர மோதல் ஏற்பட்டு வருகிறது.

ஒடுக்கிய போலீஸார்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த மாணவர்கள் மோதல், வாரத்திற்கு இரண்டு முறை நடைபெற்று வந்தது. நடுரோட்டில் பட்டாக்கத்தியுன் மாணவர்கள் வெட்டு குத்தில் இறங்கும் வரை இந்த விவகாரம் சென்றது. பின்னர் பொதுமக்களிடம் இருந்து அதிக புகார்கள் வந்ததால் அரசு இந்த விஷயத்தில் நேரடியாக கவனம் செலுத்தி, மாணவர்களின் இந்த அராஜகத்தை ஒடுக்கினர்.

அமைதியாக இருந்த மாணவர்கள்
இதுபோல வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை போலீஸார் பிடித்து வைத்து, அவர்களின் பெற்றோரை அழைத்து வந்து 'இனி இதுபோன்ற செயல்களின் எனது மகன் ஈடுபட்டார்' என எழுதிக் கொடுத்துவிட்டு பிள்ளைகளை கூட்டிச் செல்லும் நடைமுறையை போலீஸார் பின்பற்றினர். இதன் காரணமாக, கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது குறைந்திருந்தது. கல்லூரிக்கு வருவதும், செல்வதுமாகவே மாணவர்கள் இருந்தனர்.

மீண்டும் தலைதூக்கும் அராஜகம்
ஆனால், சமீபகாலமாக போலீஸார் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டி வருவதால் கல்லூரி மாணவர் அட்டூழியம் சென்னையில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. அந்த வகையில், அண்ணா சதுக்கத்தில் இருந்து ஆவடிக்கு நேற்று சென்ற ஒரு பேருந்தை அண்ணாநகர் ரவுண்டானா அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் மறித்தாக கூறப்படுகிறது. பின்னர், அந்த பேருந்தில் இருந்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் இருவரை இறக்கிவிடுமாறு நடத்துநரை அவர்கள் மிரட்டியுள்ளனர்.

பட்டாக்கத்தி - கைது
அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய மாநிலக் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர், திடீரென தாங்கள் வைத்திருந்த பட்டாக் கத்தியை வெளியே எடுத்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தாக்க பாய்ந்தனர். இதனால் பயந்துபோன பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை கையில் கத்தியுடன் மாநிலக் கல்லூரி மாணவர்கள் விரட்டினர்.
பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாடிக் கொண்டிருக்கும் சாலையில் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் ஒருவரையொருவர் துரத்தியது பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின் பேரில் சென்னை பாடிக்குப்பத்தை சேர்ந்த அந்த இரண்டு மாணவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications