"நீ எஸ்சியாடா.. உன் மூஞ்சிய பார்த்தாலே தெரிதே.." சாதி பேசிய பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை சஸ்பெண்ட்
சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை அனுராதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நீதியரசர் ராஜுவின் அனுமதியுடன் கல்லூரி செயலாளர் துரைக்கண்ணு பிறப்பித்துள்ளார்.
சென்னை சேத்துபட்டில் உள்ளது பச்சையப்பன் கல்லூரி. இது பழமைவாய்ந்த கல்லூரியாகும். இங்கு தமிழ் பேராசிரியையாக இருப்பவர் அனுராதா. இவர் தனது துறை மாணவர்களிடம் தொலைபேசியில் பேசிய உரையாடல் ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த ஆடியோவில் பேசிய அனுராதா, காலேஜுக்கு வரும் மாணவர்களின் முகத்தை பார்த்தாலே பிசியா, எம்பிசியா அல்லது எஸ்சியா என்பது தெரிந்துவிடும்.

கம்யூனிட்டி
நீ என்ன கம்யூனிட்டி என்றே எனக்கு தெரியாது. ஆனால் மூஞ்சியை பார்த்தால் சொல்லிவிடுவேன். ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த மாணவர்களால்தான் பிரச்சினையே வருகிறது. அந்த மாணவர்கள் நமக்கு தொல்லை கொடுத்து கொண்டிருக்கிறார்கள் என கூறிய அனுராதா ஒரு மாணவரின் பெயரை கூறி நீ என்ன கம்யூனிட்டி கண்ணு என கேட்கிறார்.

மூஞ்சிய பார்த்தாலே தெரியுதே
அதற்கு அந்த மாணவன் எம்பிசி மேடம் என கூற ஆம் உன் மூஞ்சியை பார்த்தாலே தெரிகிறது என கூறி தமிழ் துறையில் உள்ள சில மாணவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களுடைய ஜாதி என்ன என கேட்கிறார். அப்போது ஒரு மாணவன் எஸ்சி என சொல்ல, ஐயோ என வெறுப்பை காட்டுவது போல் அவரது ஆடியோ உரை உள்ளது.

கண்டனங்கள்
மாணவர்களின் பெயரை சொல்லி அவர்களின் சாதியை கேட்டு பாகுபாட்டை விதைக்கும் வகையில் அவர் பேசியதற்கு கண்டனங்கள் எழுந்தன. அதிலும் சமத்துவத்தை போதிக்க வேண்டிய ஒரு ஆசிரியரே இப்படி சாதி வெறியுடன் இருக்கிறாரே என சமூகவலைதளங்களில் விவாதங்கள் ஏற்பட்டன.

அனுராதா சஸ்பெண்ட்
இந்த நிலையில் இந்த கல்லூரி நீதியரசர் ராஜுவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால் அவரது அனுமதியுடன் அனுராதாவை இடைநீக்கம் செய்து கல்லூரி செயலாளர் துரைக்கண்ணு உத்தரவு பிறப்பித்துள்ளார். அனுராதா ஏற்கெனவே ஒரு முறை சாதிய ரீதியில் பேசியதால்தான் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரிக்கு இடமாறுதல் செய்யப்பட்டதாகவும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் தடை பெற்றால் அவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலேயே தனது பணியை தொடர்வதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications