Padma Shri Awards: வாயில்லா ஜீவன்களை காக்க வந்த டாக்டர்.. புண்ணியமூத்தி நடேசனுக்கு பத்மஸ்ரீ விருது.. யார் இவர்?
சென்னை: தஞ்சாவூரைச் சேர்ந்த கால்நடை விஞ்ஞானி டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசனுக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் தமிழ்ப் பாரம்பரிய சிகிச்சை முறைகளை கையாண்டு வெற்றி கண்டவர் புண்ணியமூர்த்தி நடேசன்.
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 5 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், ஓவியர் நீலகிரி ஆர். கிருஷ்ணன், சிற்பக் கலைஞர் காளியப்ப கவுண்டர், திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புண்ணியமூர்த்தி நடேசன்
இயற்கை கால்நடை மருத்துவ பேராசிரியர் புண்ணியமூர்த்தி நடேசன், வாய் பேச முடியாத ஜீவன்களான கால்நடைகளுக்கு என்னென்ன நோய்கள் வருகிறதோ, அவற்றை எல்லாம் இயற்கை சார்ந்த அணுகுமுறையில் மிக எளிதாக, அதிக செலவில்லாமல் தீர்க்கக் கூடிய வழிமுறைகளை முறையாக ஆய்வு செய்து அறிமுகப்படுத்தியவர். புண்ணியமூர்த்தியின் ஆய்வுகள் தமிழ்நாடு தாண்டி இந்தியா முழுமைக்கும், பல வெளிநாடுகளிலும் கடைபிடிக்கப்படுகின்றன.
தஞ்சையில் உள்ள தமிழ்நாடு கால் நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் (TANUVAS) மரபுசார் மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் புண்ணியமூர்த்தி நடேசன். பணி ஓய்வு பெற்றாலும், ஓய்வின்றி கால்நடைகளுக்காகப் பாடுபட்டு வருபவர். பல லட்சம் மாடுகளை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றியவர் இவர்.
மரபுவழி கால்நடை மருத்துவம்
மரபு வழி கால்நடை மருத்துவம் குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். இவரது இயற்கை மருத்துவ முறைகள் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பின்பற்றப்படுகின்றன. மருத்துவத் துறையில் இவரது பங்களிப்பு கால்நடை வளர்ப்பாளர்களுக்குப் பெரும் உதவியாகக் கருதப்படுகிறது.
குஜராத்தில் உள்ள தேசிய பால் பண்ணை வளர்ச்சி ஆணையம் பேராசிரியர் புண்ணியமூர்த்தி நடேசனின் ஆய்வை உள்வாங்கி பாரம்பரிய இயற்கை மருத்துவ மூலிகைகளைக் கொண்டு அனைத்து நோய்களையும் தீர்ப்பதற்கான மருத்துவ முறையை பத்து லட்சத்திற்கும் மேலான கால்நடைகளுக்கு பயன்படுத்தி 85% வெற்றி கண்டுள்ளது.
பல நாடுகள் பின்பற்றும் மருத்துவ முறை
இவர் கண்டறிந்துள்ள தமிழரின் மரபு மருத்துவ முறைகளை இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பால் பண்ணைகள் சிறப்பாக பயன்படுத்தி மக்களுக்கு தரமான பாலினை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன. கோமாரி நோய்க்கும், மாடுகளுல்கு கால் புண்ணுக்கும் இவரது எளிய மருத்துவத்தை இன்று இந்தியா மட்டுமல்ல, உலகத்தின் பல நாடுகள் பின்பற்றுகின்றன.
இயற்கை மருத்துவ முறைகள் மூலம் லட்சக்கணக்கான கால்நடைகளை நோயிலிருந்து பாதுகாத்ததற்காக, 2026 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருது இயற்கை கால்நடை மருத்துவ பேராசிரியர் புண்ணியமூர்த்தி நடேசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications